எல்லாப் பெருமையும் மாநிலங்களுக்கே.. நிதி ஆயோக் கூட்டத்தில் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி!
டெல்லி : டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நடைபெறும் கவுன்சில் குழுவின் முதல் நேரடி கூட்டம் இது.
இந்தக் கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 23 மாநில முதலமைச்சர்கள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டுக்கே பெருமை.. இனி செஸ் எங்கேயோ போகும்.. விஸ்வநாதன் ஆனந்த்தை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
நிதி ஆயோக் கூட்டம்
நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெ ல்லியில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் 23 மாநில முதலமைச்சர்கள், நீதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஸ்டாலின் பங்கேற்கவில்லை
தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கும் முதல்வர்கள், ஆளுநர்களுக்கு மட்டுமே அனுமதி என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பிரதமர் மோடி பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கியப் பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. வள ஆதார குறைபாடுகள் இருந்தபோதிலும் சவால்களை உறுதியுடன் சமாளிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்தது. இதற்கான பெருமை மாநில அரசுகளுக்கே உரியது.
ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க
மாநில அரசுகள் அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் மக்களுக்கு பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். ஜி.எஸ்.டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு உழைப்பு தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது.
சுதந்திர தினம்
இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தில் முதல் முறையாக, இந்தியாவின் அனைத்து தலைமைச் செயலாளர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மூன்று நாட்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதித்தனர். இந்த கூட்டு செயல்முறை இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வழிவகுத்தது." என்று பிரதமர் மோடி பேசினார்.