அரசு பங்களாவை காலி செய்யவில்லை.. உச்சநீதிமன்ற மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மீது பரபரப்பு புகார்
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிந்து 6 மாதம் கடந்தாலும் கூட அவர் தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை காலி செய்யவில்லை. உடனடியாக அவரை காலி செய்ய வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நிர்வாகம் சார்பில் மத்திய அரசுக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 1ம் தேதி உச்சநீதிமன்ற நிர்வாகம் சார்பில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பஙகளாவை நீதிபதி டிஒய் சந்திரசூட் பயன்படுத்தி வருகிறார். அவரை உடனடியாக வெளியேற வைத்து பங்களாவை ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் பங்களாவை பயன்படுத்துவதற்கான காலஅவகாசம் 2025ம் ஆண்டு மே 31ம் தேதி முடிவடைந்தது'' என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாஜி தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறுகையில், ‛‛நான் ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு பங்களாவை வாடகைக்கு அரசு ஒதுக்கியது. ஆனால் அந்த பங்களா கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. தற்போது புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்த மறுநாள் அங்கு சென்று விடுவேன் என்று உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்து உள்ளேன்.
என் மகள்களுக்கு பிறந்தபோதே உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மரபணுசார்ந்த குறைபாடு உள்ளது. நெமலின் மயோபதி பிரச்சனை இருக்கிறது. எய்ம்ஸில் உள்ள நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது எனது தனிப்பட்ட பிரச்சனை தான். ஆனால் ஒரு வீட்டை உடனடியாக மாற்றாமல் இருப்பதற்கு ஏன் இவ்வளவு நேரம் பிடிக்கிறது என்பதை நான் தெளிவுப்படுத்த வேண்டும். இதுபற்றி நான் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளேன். இன்னும் சில நாட்களில் நான் மாறிவிடுவேன். நான் நீதித்துறையில் உயரிய பொறுப்பில் இருந்தவன். இதனால் எனது பொறுப்பு என்னவென்று எனக்கு தெரியும். விரைவில் இதனை காலி செய்து விடுவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications