'சென்டர் ஆஃப் கிராவிட்டி..' போரில் இது முக்கியம் அப்பு! பாகிஸ்தான் சொதப்பியது இங்குதான்
டெல்லி: சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த சண்டையில் பாகிஸ்தான் பலமாக வாங்கி கட்டிக்கொண்டது. இதற்கான காரணம் 'சென்டர் ஆஃப் கிராவிட்டி' எனும் கோட்பாட்டை தவறாக குழப்பிக்கொண்டதுதான் என்று இந்திய விமானப்படையின் முன்னாள் போர் விமானி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பலத்தையும், பலத்தின் மையத்தையும் (சென்டர் ஆஃப் கிராவிட்டி) போட்டு குழப்பிக்கொண்டது. பலம் என்பது வேறு, பலத்தின் மையம் என்பது வேறு என இந்திய விமானப்படை ஓய்வுபெற்ற போர் விமானியும் முன்னாள் குரூப் கேப்டனுமான அஜய் குமார் அஹ்லாவத் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரஷியன் ஜெனரல் கார்ல் வோன் கிளாஸ்விட்ஸின் 'சென்டர் ஆஃப் கிராவிட்டி' கோட்பாடு, போர்க்காலங்களில் மேற்கோள் காட்டப்படுவது வழக்கம். முதலில் எதிரியை ஒரு அமைப்பாக நாம் பிரித்து புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த அமைப்பின் அடிமட்டம், அதாவது மொத்த அமைப்புக்கும் வலு கொடுக்கும், வழிக்காட்டும் இடம் எது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் 'சென்டர் ஆஃப் கிராவிட்டி' என்று சொல்வார்கள்.
இந்த இடத்தை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்த அமைப்பையும் நம்மால் பலவீனப்படுத்த முடியும். இந்த கோட்பாடு அதைத்தான் சொல்கிறது.
குல்ப் போரில் பாக்தாத் நகர் கைப்பற்றப்பட்டதும், ஈரான் தோல்வியை தழுவியது. இது இந்த கோட்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய ராணுவம் இந்த கோட்பாட்டை பின்பற்றியது. அவர்கள் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் முக்கிய இலக்குகளை குறி வைக்கவில்லை. அதேபோல நாம் தாக்கியது அனைத்தும் அவர்களுடைய முக்கிய இலக்குகளாகும். எனவேதான் அவர்களால் பலமாக நம்மீது எதிர் தாக்குதலை நடத்த முடியவில்லை. பாகிஸ்தான் அவர்களது பலத்தை பாதுகாக்க தவறிவிட்டனர்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அம்சமான எஸ்-300-க்கு சமமாக எச்க்யூ-16 எனும் பாதுகாப்பு அம்சத்தை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. இது 300-400 கி.மீ தூரம் வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் அதன் சென்சார் அழிக்கப்பட்டால், இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஆக இதில் சென்டர் ஆஃப் கிராவிட்டி என்பது வான் பாதுகாப்பு அம்சத்தின் சென்சார்தான். ஆனால் பாகிஸ்தான் இதை வலிமையுடன் சேர்த்து குழப்பிக்கொண்டது.
இந்தியாவை பொறுத்தவரை ரஃபேல் விமானங்கள் நமது பலத்தின் மையம் கிடையாது. அது வெறும் பலம் மட்டும்தான். ஒரு பேச்சுக்கு, பாகிஸ்தான் திறமையாக செயல்பட்டு 2-3 ரஃபேல் விமானங்களை அழித்தது என்றாலும் கூட எங்கள் தாக்குதலின் வீரியம் குறையாது. இன்னும் தெளிவாக சொலவதெனில் நம்மிடம் இருக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு அம்சமான எஸ்-400-ஐ பாகிஸ்தான் அழித்தால் கூட நம்முடைய தாக்குதலின் வீரியம் குறைந்துவிடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications