EXCLUSIVE: டெல்லி ஐஏஎஸ் கோச்சிங் செண்டர் வெள்ளம்.. 3 பேர் பலியானது எப்படி? வெளியான ஷாக்கிங் தகவல்கள்
டெல்லி: டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. தரை தளத்தில் படித்துக் கொண்டு இருந்த இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என மூன்று பேர் பலியான சம்பவம் தலைநகரை மட்டுமின்றி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? 3 பேர் பலியாகும் அளவிற்கு அங்கே நிலைமை மோசமானது எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஒன்இந்தியா சார்பாக நேரடியாக களத்திற்கே சென்று ஆய்வு மேற்கொண்டோம். இதில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் நமக்கு கிடைத்தன.
கடந்த 27ம் தேதி மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரை தளத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்தது. அங்கே பெய்த கனமழைக்கு இடையே உள்ளே வெள்ளம் புகுந்தது. பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பல மணி நேரமாக மீட்பு பணிகள் நடக்காத நிலையில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள்.

அதிர்ச்சி ரிப்போர்ட்: இது தொடர்பாக டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அமைச்சர் அதிஷியிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். ஒன் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பின்வரும் அதிர்ச்சி விஷயங்கள் வெளியாகி உள்ளன.
1. வடிகால் அமைப்பு பிளாக்: ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வடிகால் அமைப்பு செயல்படவில்லை. அது முற்றிலுமாகத் பிளாக் ஆகி இருந்துள்ளது. அதாவது அங்கே லேசாக தண்ணீர் தேங்கினால் கூட வெளியேறும் வசதி இல்லை. ,
2. பார்க்கிங் பகுதி பாதிப்பு: நிறுவனத்திற்கான பார்க்கிங் பகுதி நேரடியாக சாலையில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் கனமழையின் போது, சாலையில் உள்ள தண்ணீர் மழைநீர் வடிகாலில் செல்லாமல் வாகன நிறுத்துமிடத்திற்குள் புகுந்தது. பார்க்கிங் நிரம்பி அப்படியே தரை தளத்திற்கு தண்ணீர் சென்றுள்ளது.
3. பாதுகாப்பு இல்லை: பாதுகாப்பு ஊழியர்கள் அங்கே பாதுகாப்பு கொடுக்கவில்லை. செக்யூட்டி யாரும் தண்ணீர் நிரம்புவது பற்றி எச்சரிக்கவில்லை. வாகன நிறுத்துமிடத்திலிருந்து தரைத்தளத்திற்கு தடையின்றி தண்ணீர் பாய்ந்துள்ளது. ஆனால் அதை பற்றி எச்சரிக்கை விடுக்க யாரும் இல்லை.
4. சாலை பிரச்சனை: சங்கர் சாலையில் இருந்து பூசா சாலை வரையிலான சாலை சாஸர் போன்ற வடிவில் உள்ளது. அதாவது கோச்சிங் இன்ஸ்டிட்யூட் முன்புறம் மிகத் தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால் தண்ணீர் வேகமாக சறுக்கு மரத்தில் வருவது போல சரிந்து வந்துள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்தால் தண்ணீர் இன்னும் கூடுதலாக உள்ளே வந்துள்ளது.
5. அங்கே இருக்கும் மழைநீர் வடிகால் வசதியும் கூட கற்கள் மற்றும் குப்பைகள் வைத்து மூடப்பட்டு இருந்துள்ளது.
அங்கே யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க வந்த தன்யா, ஸ்ரேயா யாதவ் மற்றும் நெவின் டால்வின் ஆகியோர் இந்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த வெள்ளத்தில் காப்பாற்றப்பட்ட 21 வயதான ரிஷப் பால் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை நம்மிடம் பேசி உள்ளார். என்னை தான்யா சோனிதான் காப்பாற்றினார். ஆனால் அவர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துவிட்டார். என்னுடைய சக மாணவ, மாணவிகளை காப்பாற்ற முடியாமல் போனதற்காக என்றென்றும் குற்ற உணர்வுடன் இருப்பேன். என்னால் தூங்க கூட முடியவில்லை. அந்த கொடூரம் இப்போதும் என் கண் முன் இருக்கிறது என்றுள்ளார்.
தண்ணீர் கட்டிடத்திற்குள் நுழைய ஆரம்பித்தபோது நாங்கள் நூலகத்தில் இருந்தோம். கேட் அருகே இருந்த சுமார் 10 முதல் 12 மாணவர்கள் அவசரமாக வெளியே வர முடிந்தது, ஆனால் படிக்கட்டுகளில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் எங்களில் 10-15 பேர் மாட்டிக்கொண்டோம். 10 பேர் வெளியே வந்துவிட்டோம். மீதம் உள்ள 5 பேரில் நானும் ஒருவன்.. அதில் 3 பேர் இறக்க 2 பேர் மட்டும் தப்பித்தோம்.
என் பேட்ச்மேட்டாக இருந்த தன்யா, பயப்படத் தேவையில்லை, நாம் காப்பாற்றப்படுவோம் என்று நம்பிக்கையாக இருந்தார். மனித சங்கிலி அமைப்போம்.. தப்பிக்கலாம் என்றும் கூறினார். நாங்கள் சங்கிலியை உருவாக்க முயற்சித்தோம், ஆனால் தண்ணீர் ஓட்டம் காரணமாக எங்களால் பிடிக்க முடியவில்லை.. எங்களை காப்பாற்றிய தன்யா இறந்துவிட்டார்.
நேரம் செல்ல செல்ல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, தான்யாவும் ஸ்ரேயாவும் ஒரு மேஜையில் நின்றார்கள். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தேன். படிக்கட்டுகளில் பாதி வழியில், அங்கே இருந்த அலுவலக பணியாளர் என்னை நோக்கி கையை நீட்டி மேலே இழுத்தார். தன்யாதான் என்னை புஷ் செய்து மேலே அனுப்பினார். எனக்கு பின்னால், என் நண்பர் ஜெய்தீப் மற்றும் சிலர் வெளியே வந்தனர். அப்போது, தண்ணீரில் சிக்கியவர்களை இழுக்க எங்கள் நிறுவன ஊழியர்கள் கயிறு கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் தண்ணீர் அவர்களை மூழ்கடித்துவிட்டது. அவர்கள் வருவதற்குள் தன்யா, ஸ்ரேயா யாதவ் மற்றும் நெவின் டால்வின் ஆகியோர் இந்த வெள்ளத்தில் பலியனார்கள், என்று ரிஷப் உருக்கமாக பேசி உள்ளார்.
அங்கே பயோ மெட்ரிக் இருந்ததால்தான் மாணவர்கள் வெளியே வர முடியவில்லை என்று பொய்யான செய்திகள் வருகின்றன. ஆனால் நாங்கள் நேரில் நடத்திய ஆய்வில் அங்கே பயோமெட்ரிக் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மரணம்: பயிற்சி மையத்தின் தரைதளத்தில் தான், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான 80 சதவீத புத்தகங்கள் இருந்து இருக்கின்றன. இதனால், இரவு 7 மணியளவில் இந்த நூலகத்தில் மாணவ - மாணவிகள் பலர் இருந்தனர். அப்போது பலத்த மழை காரணமாக பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து வந்தனர். வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் கொண்டு வெளியேற்றினர். பல மணி நேரம் இந்த பணி நீடித்தது. ஆனால் அதற்குள் 3 உயிர்களை இந்த வெள்ளம் பலி கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications