பிள்ளைகள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்ய முடியாது.. ஐகோர்ட் திட்டவட்டம்
டெல்லி: காதல் திருமணம் தொடர்பான வழக்கில் ஒரு நபர் யாரைத் திருமணம் செய்கிறார் என்பதை அவரது குடும்பத்தினரால் நிர்ணயம் செய்ய முடியாது என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் திருமணங்கள் என்பது பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டே நடக்கிறது. காதல் திருமணங்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே நடக்கிறது.

அதிலும் பெரும்பாலான காதல் திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடன் நடப்பது இல்லை. இன்னும் சில நேரங்களில் பெற்றோரே கூட தங்கள் பெற்ற குழந்தைகளை ஆணவக் கொலை செய்யும் ஷாக் சம்பவங்களும் கூட நடக்கவே செய்கிறது.
வழக்கு: இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தினர் தங்களை அச்சுறுத்துவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், தனது தீர்ப்பில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தது.
அதாவது ஒருவரின் சொந்த விருப்பப்படி ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை நீக்க முடியாது என்றும் அது அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது என்றும் தெரிவித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி, குடும்ப உறுப்பினர்களால் கூட யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதால் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
குடும்பத்தினரால் கூட: இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "மனுதாரர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையைப் பறிக்க முடியாது. இந்த உரிமை அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.. அதை எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்ய முடியாது. இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரம் மேஜர். மேலும் அவர்களுக்குத் திருமணமும் நடந்துள்ளது. எனவே, இந்த திருமணத்தை குடும்ப உறுப்பினர்கள் கூட ஆட்சேபிக்க முடியாது" என்றனர்.
பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகக் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போது முதலே தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகப் பெண்ணின் தாயார் தங்களை அச்சுறுத்தி வருவதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் இருந்தாலும் தங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அந்த தம்பதி, தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பிற்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாதுகாப்பு தர உத்தரவு: இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் மேலும் கூறுகையில், இதில் மனுதாரர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.. பெற்றோர் அல்லது அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எந்தவொரு தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த பெண் பாதுகாப்பாக உள்ளாரா என்பதை அதிகாரி சரிபார்க்க வேண்டும்.
ஒருவேளை மனுதாரர்கள் வேறு இடத்திற்கு மாறினால்.. எந்த போலீஸ் நிலைய வரம்பிற்குள் வருகிறார்களோ.. அவர்களிடம் சொல்லிப் பாதுகாப்பைப் பெறலாம். இதில் மனுதாரர்கள் தங்களுடைய வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தின் முகவரியையும் போலீஸ் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும்.. அவர் அதை எந்த சம்பந்தம் இல்லாத நபர்களிடம் பகிரக் கூடாது" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications