சீன எல்லையில் மாயமான விமானம்.. பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர்.. உறவினர்கள் பிரார்த்தனை
டெல்லி: சீன எல்லையில் மாயமான ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர் என தெரியவந்தது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மிகவும் சிறிய ரக விமானம் ஆகும். இதில் 25 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த விமானங்கள் உணவு பொருள் எடுத்துச் செல்வதற்கும், மலை பாங்கான பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

விமானங்கள் தேடல்
மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் சீன எல்லை அருகே உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 2 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

13 பேரில் ஒருவர்
காணாமல் போன விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரது விவரங்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

பாட்டியாலா
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (27) என்பது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்த மோகித்தின் தந்தை சுரீந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

மனைவி வங்கி அதிகாரி
மோகித்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. ஜலந்தரை சேர்ந்த அவரது மனைவி வங்கி அதிகாரியாவார். மோகித் நலமுடன் இருக்க அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications