இன்று விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்... நாடு முழுவதும் பெருகும் ஆதரவு..!
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த பட்டினிப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத் தலைவர் குருநாம் சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என அவர் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் ஒரு புறம் நடைபெற்றாலும் வழக்கம் போல் தர்ணா போராட்டமும் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே அனைத்து மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு வரவேண்டும் என கடந்த வாரம் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் போக்குவரத்து வசதி, பொருட்செலவுக்கு பணம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் டெல்லிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட தலைநகரங்களிலேயே அந்தந்த பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு அதிதீவிரம் காட்டி வருகிறது. விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது தொடர்பாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், தாமும் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications