விவசாயிகள் போராட்டம்: 'என் சீருடைக்கு துரோகம் செய்ய முடியாது' - சற்றும் அஞ்சாத பெண் காவல் ஆய்வாளர்
டெல்லி: டிராக்டர்கள் பேரணியின் போது, போராட்டக்காரர்களை டெல்லி உள்ளே நுழைய அனுமதி மறுத்த பெண் காவல் ஆய்வாளர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் பல கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், பிறகு பேரணியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளின் ஒரு பிரிவினர், டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை இடித்து தள்ளி உள்ளே நுழைந்தனர். இதனால், போலீசார் தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர்.
இருந்தபோதிலும் தடுப்புகளை கடந்து டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் அவர்கள் நுழைந்து, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றினர்.
இந்நிலையில், டெல்லி கலவரம் குறித்த புதிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஜனவரி 26 ம் தேதி காசிப்பூர் எல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில விவசாயிகள், தடுப்பு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர்.
பெண் ஆய்வாளர் புஷ்பலதா என்பவரின் கட்டுப்பாட்டு பகுதியில் விவசாயிகள் டிராக்டர்களுடன் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற ஆய்வாளர் புஷ்பலதாவிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, "நானும் ஒரு விவசாயியின் மகள். ஆனால், என் சீருடைக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. நான் என் சீருடைக்கு துரோகம் செய்தால், நீங்களும் துரோகம் செய்வதாகத் தான் அர்த்தம்" என்று கூறி அவர்களை மீண்டும் தடுக்க முயற்சி செய்கிறார்.
அந்த வீடியோவில் பாரதிய கிஸான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷையும் காண முடிகிறது. டெல்லி செங்கோட்டை மற்றும் இன்ன பிற பகுதிகளில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாகக் கூறி, ராகேஷ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.