டெல்லி டிராக்டர் பேரணி: மது அருந்த கூடாது, இசை வாத்தியங்களுக்கு அனுமதி இல்லை- விவசாயிகளுக்கு அட்வைஸ்
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் 1 லட்சம் டிராக்டர் பேரணியில் பங்கேற்கும் விவசாயிகள் மது அருந்தி இருக்கக் கூடாது; இசைவாத்தியங்களை இசைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2 மாதமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக டெல்லியில் குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படுகிறது.

இந்த டிராக்டர் பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். இதனிடையே டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக விவசாய சங்கத்தினரும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
இதன்படி ஒரு டிராக்டரில் அதிகபட்சம் 5 பேர்தான் இருக்க வேண்டும்; விவசாய சங்க கொடிகளுடன் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும்; மது அருந்திவிட்டு பேரணிக்கு வரக் கூடாது; பேரணியின் போது இசைவாத்தியங்களை எழுப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் விவசாயிகள் பேரணி தொடர்பாக 7428384230 என்ற தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே விவசாயிகள் போராட்டத்தின் போது இதுவரை 162 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் பஞ்சாப் கலாசார கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications