விவசாயிகள் மீதான பொய் வழக்குகள்.. மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்த விவசாய சங்கங்கள் கோரிக்கை
டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அப்போதே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆனால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் மீதான பொய் வழக்குகள், இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட 6 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் சங்கங்கள் கடிதமும் எழுதியிருந்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் சங்கத்தினரிடம் நேற்றைய தினம் பேசியுள்ளார். 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அதுகுறித்த விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிங் எல்லையில் கூடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் போராட்டக்காரர்கள் மீதான போலி வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்த வேண்டும். அது போல் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஆலோசனை நடத்த குழு அமைப்பது குறித்தும் தெளிவுப்படுத்த வேண்டும்.
எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் நாங்கள் வீடு திரும்ப தயார். மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க அமைக்கப்படும் குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என்பது மட்டுமே உள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை ஆதரித்தும் தங்களை விவசாய சங்கங்கள் என கூறிக் கொண்ட சிலர் அந்த குழுவில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. இது குறித்தெல்லாம் மத்திய அரசு விவரிக்க வேண்டும். டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி, குடியரசு தின விழாவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்தும் தெளிவு வேண்டும்.
இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும். கடந்த 2017 ஆம் ஆண்டு மண்டசார் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவோம் என மத்திய பிரதேச அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுநாள் வரை அவை வாபஸ் பெறப்படவில்லை. எனவே விவசாயிகள் மீதான வழக்குகள் எந்தவித நிபந்தனையுமின்றி வாபஸ் பெறப்பட வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications