தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லியை முற்றுகையிட செல்லும் விவசாயிகள் ஹரியானாவில் கைது
டெல்லி: மத்திய அரசுடன் நடத்தப்பட்ட 4ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர்களில் செல்லும் நிலையில் அவர்களை ஹரியானா எல்லையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை ஒடுக்க டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போராட்டம் அறிவித்ததுமே கடந்த 8ஆம் தேதியே மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் வரமுடியாதபடி தடுப்புகள் அமைத்து எல்லை மூடப்பட்டது. மீண்டும் 12 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையிலும் தோல்வியே இருந்த நிலையில் போலீஸாரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
எனினும் டெல்லி எல்லையான சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்து கடந்த 13 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஹரியானா எல்லையில் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து சண்டிகரில் கடந்த 15 ஆம் தேதி மாலை மீண்டும் பேச்சுவார்த்தையை மத்திய அமைச்சர்கள் குழு நடத்தின. ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹரியானா எல்லையில் டிராக்டர்களில் விவசாயிகள் குவிந்துள்ளனர். மேலும் டெல்லி போலீஸார் ஏற்படுத்திய தடுப்புகளை உடைக்க ஜேசிபி வாகனங்களையும் விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஹரியானா எல்லையில் இருந்து இரும்பு ஷூட்டுகள், தண்ணீர் டேங்குகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னணி என்ன?: கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் சென்றது. அது போன்றதொரு போராட்டத்தை நடத்த 6 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களுடன் டெல்லி சென்றுள்ளனர். பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பாஜக அரசுக்கு அவரது குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற சுவாமிநாதன் கூறி உள்ளதை பாஜக அரசு செய்யவில்லை என விவசாயிகள் கடுமையாக விமர்சித்தனர்.












Click it and Unblock the Notifications