மீண்டும் போர்க்களமானடெல்லி: ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்- எல்லைகளில் போலீஸ் படை குவிப்பு
டெல்லி: மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
Recommended Video
மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானது; கார்ப்பரேட்டுகள் வசம் விவசாயத்தை ஒப்படைக்க வகை செய்யும் என எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்தப் போராட்டம் டெல்லியில் மையம் கொண்டது.

டெல்லியின் எல்லைகளில் வெயில், பனி, குளிர் என எதனையும் பொருட்படுத்தாது ஓராண்டுகாலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதன்பின்னர் மத்திய அரசு இறங்கி வந்தது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்தார். இதனால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே டெல்லியில் விவசாயிகள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் ராகேஷ் திகாயத் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று டெல்லி எல்லைகளில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் போலீஸ் தடைகளை உடைத்துக் கொண்டு ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் தடுக்கப்படும் விவசாயிகள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications