விவசாய போராட்டம்: சாலையை மறிக்க கூடாது.. மத்திய, மாநில அரசுகளிடம் தீர்வு கேட்கும் உச்ச நீதிமன்றம்
டெல்லி: வட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட கூடாது, விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தை தடுக்க மத்திய அரசும், உத்தர பிரதேச, ஹரியானா மாநில அரசுகளும் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ள 3 விவசாயங்களுக்கு எதிராக நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினார்கள். நாடு முழுக்க உள்ள பல்வேறு சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 10 மாதமாக விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் தீவிரமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். முக்கியமாக ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் சாலை தடுப்புகளை அமைத்து அங்கேயே தங்கி உள்ளனர்.

விவசாயிகள்
இந்த நிலையில் விவசாயிகளின் இந்த சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோனிக்கா அகர்வால் என்ற நொய்டா பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு சென்றுவிட்டு திரும்புவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. இயல்பாக 20 நிமிடம் மட்டுமே எடுக்கும் இந்த பயணம் விவசாயிகளின் சாலை மாறியலால் 2 மணி நேரம் எடுப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்கே கவுல் மற்றும் ஹரிஷ்கேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் ஒரு கட்டமாக இன்று நீதிபதிகள் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், மனுதாரருக்கு சில முக்கியமான பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு மத்திய அரசு கையிலும், மாநில அரசு கையிலும்தான் இருக்கிறது.

போராட்டம்
ஒரு இடத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட கூடாது என்று குறிப்பிட்டனர். சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து பேசிய நீதிபதிகள், மத்திய அரசு ஏன் இதற்கு தீர்வு காண கூடாது. விவசாயிகளுக்கு போராடும் உரிமை உள்ளது. ஆனால் அவர்களுக்கு சாலை மறியல் மூலம் போக்குவரத்தை தடை செய்யும் உரிமை இல்லை.

பிரச்சனை
இந்த பிரச்சனைக்கும், டிராபிக் ஜாம் ஏற்படாமல் இருப்பதற்கும் மத்திய அரசும், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா அரசும் உடனடி தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதே வழக்கில்விவசாயிகள் பொது மக்களின் போக்குவரத்தை பாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

உத்தர பிரதேசம்
இது தொடர்பாக இதற்கு முன்பே உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு இருந்தது. இரண்டு மாநில அரசுகளும் விவசாயிகளின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. சாலை மறியல் போராட்டம் மக்களின் பயணத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக அறிக்கையில் கூறி இருந்தது. இந்த நிலையில்தான் சாலை மறியல் போராட்டத்தை தடுக்க மத்திய அரசும், உத்தர பிரதேச, ஹரியானா மாநில அரசுகளும் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications