டெல்லி விவசாய போராட்டம்.. 3 மாநிலங்களில் டோல் கட்டண இழப்பு ரூ.815 கோடி.. மத்திய அரசு ஷாக்
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் டோல் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்து வரும் விவசாய போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வந்து போராட்டம் செய்து வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.
சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் டோல் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை இந்த டோல் கட்டண இழப்பு ஏற்பட்டதாக ராஜ்யசபாவில் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அதிகமாக 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் 326 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 1.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய போராட்டம் காரணமாக வேறு மாநிலங்களில் இழப்பு ஏற்படவில்லை. டோல் வருவாய் இல்லாமல் இந்த 3 மாநிலங்களில் மட்டும் சாலை போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.