நீங்கதான் ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்... விவசாயிகள் போராட்டத்தை சமாளிக்க மத தலைவர்களை நாடும் அரசு
டெல்லி: இக்கட்டான சூழ்நிலையில் இன்று எட்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், நரேந்திர சிங் தோமர் நேற்று சீக்கிய மத தலைவரை சந்தித்தார்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்கள் அறிமுகப்படுத்தியது. இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை ஏழு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்னர் அமைச்சர்கள் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் நிறைய சட்டங்கள் வரும்
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை விவசாய துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிகூறியுள்ளார். மேலும் அவர், "இடைத்தரகர்களின் தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் காலங்களில் இதேபோல நிறைய விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் வரும். அப்போதும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படலாம்" என்றார்.
ஆன்மிக தலைவரைச் சந்தித்த அமைச்சர்
இந்நிலையில், நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை பஞ்சாபில் உள்ள நானாக்ஸர் சீக்கிய பிரிவின் தலைவர்களில் ஒருவரான பாபா லகா சிங்கை சந்தித்தார். விவசாயிகளின் போராட்டம் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட பாபா லகா சிங், அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகக் கூறினார். டெல்லியில் போராட்டம் தீவிரமடையும் முன்பே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பாபா லகா சிங் ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் கூறுவது என்ன
விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை பாபா லகா சிங் சந்தித்தது குறித்து விவசாயச் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "பாபா லகா சிங் இதுவரை எங்களிடம் எதுவும் பேசவில்லை. மத்திய அரசு இந்தப் புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் மத்தியஸ்தம் செய்து வைக்க என்ன இருக்கிறது. சட்டம் திரும்பப் பெறாத வரை நாங்கள் பஞ்சாப் மாநிலத்திற்குத் திரும்ப மாட்டோம்" என்றார்.