6 மாதம் என்ன...மோடியின் ஆட்சிக் காலம் முடியும்வரை போராட்டத்தை தொடருவோம்- விவசாய சங்கங்கள் 'வார்னிங்'
டெல்லி: மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது; ஒட்டுமொத்த மோடி ஆட்சிக் காலம் முழுவதுமே போராடத்தை தொடரவும் தயார் என்றும் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
டெல்லியில் 20 நாட்களைக் கடந்து விவசாயிகளின் போராட்டம் உக்கிரமாக நீடிக்கிறது. பஞ்சாப், ஹரியானாவை தொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர்.

திரும்பப் பெறுக
மத்திய அரசும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.. விவசாய சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதாக கூறியது. ஆனால் தங்களுக்கு தேவை, புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றாக வேண்டும் என்பது மட்டுமே என்பதில் போராடும் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தின் தலைவர் சத்னம் சிங் சஹானி கூறியதாவது:

போராட்டம் தொடருகிறது
நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்னர் வீடுகளில் முடங்கிக் கிடக்கவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினோம்.. ரயில்களை மறித்து போராடினோம். எங்களது போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

கைகளில் 6 மாத பொருட்கள்
நாங்கள் டெல்லிக்கு வரும்போதே 6 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டுதான் வந்திருக்கிறோம். 6 மாதங்களுக்குப் பின்னரும் போராட்டம் நீடித்தாலும் எங்களுக்கான பொருட்கள் பஞ்சாப்பில் இருந்து வந்து சேரும்.

2024 வரை போராடுவோம்..
தேவைப்பட்டால் பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் முழுவதுமே 2024-ம் ஆண்டு வரையும் போராட்டம் நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் சக்திகளை நாங்கள் நன்றாகவே உணர்ந்தும் அறிந்தும் வைத்திருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எங்களது போராட்டங்களில் யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆதரவு தெரிவித்துவிட்டுப் போகலாம். எங்களது விவசாயிகள் உற்சாகம் குறையாமல் இருந்து வருகின்றனர். எங்களது போராட்டம் தொடரவே செய்யும். இவ்வாறு சத்னம் சிங் சஹானி கூறினார்.












Click it and Unblock the Notifications