அதெப்படி முடியும்? நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராடுவோம்- ராகேஷ் திகாயத்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தாங்கள் வீடு திரும்பப் போவது இல்லை; தங்களது போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான ராகேஷ் திகாயத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Recommended Video
நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றி பிரதமர் மோடி, ஓராண்டுக்கு முன்னர் கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக கூறினார். மேலும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிகாரப்பூர்வமாக இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார் பிரதமர் மோடி.

விவசாய சட்டங்கள் வாபஸ்
மேலும் விவசாயிகளின் நலனுக்காகவே விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விவசாய விளை பொருட்களை எளிதாக விற்பனை செய்ய பல திட்டங்களை ஏற்கனவே மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி. அதே நேரத்தில் விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு இந்த சட்டங்களின் நன்மைகள் குறித்து எங்களால் புரியவைக்க முடியவில்லை. ஆகையால் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மகிழ்ச்சி கொண்டாட்டம்
கடந்த ஓராண்டாக டெல்லி எல்லைகளில் எத்தனையோ இன்னல்களுக்கும் உயிர் பலிகளுக்கும் நடுவே போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இந்த அறிவிப்பை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் விவசாயிகள் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

முதல்வர்கள் வரவேற்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடியின் இந்த அறிவிப்பை விமர்சனத்துடன் வரவேற்றுள்ளனர்.

போராட்டம் முடியவில்லை..
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான ராகேஷ் திகாயத் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்ட பின்னரே போராட்டங்களை கைவிடுவது தொடர்பாக முடிவெடுப்போம். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications