நாடு முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாய முறை அமலுக்கு வந்தது - இல்லாதவர்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூல்!
டெல்லி: நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது. வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் செல்பவர்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் முறைக்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தொடருகிறது. சுங்க சாவடிகளின் இந்த கட்டண வசூலுக்கு மத்தியில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையும் இருந்து வருகிறது.
இதனை மாற்றும் வகையில் ஃபாஸ்டேக் எனப்படும் பார்கோடு ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த பார்கோடு ஸ்டிக்கரை வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும். சுங்க சாவடிகளை கடக்கும் போது இந்த பார்கோடு விவரங்கள் மூலம் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை பிப்ரவரி 15-ந் தேதிக்கு பின் நீட்டிக்கமாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த ஃபாஸ்டேக் நடைமுறை கட்டாயம் என்பது அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஃபாஸ்டேக் பார்கோடு ஸ்டிக்கர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட்டாக செலுத்தப்படும். இதனை ஆன்லைன் அல்லது சுங்க சாவடிகள் அல்லது வங்கிகளில் பெற முடியும். நீண்ட தொலைவு செல்லும் போது ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.