இந்தியாவில் எஃப்.பி.ஐ நடத்திய சீக்ரெட் ஆபரேஷன்.. உலகின் டாப் 10 மிகவும் தேடப்படும் குற்றவாளி கைது!
டெல்லி: அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிகாரிகள் மிகவும் முக்கியமான ஒரு ஆபரேஷனை இந்தியாவில் நடத்தியுள்ளனர். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் இந்தியாவில் பதுங்கியிருந்த உலகின் டாப் 10 மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படும் சிண்டி ரோட்ரிகஸ் சிங் என்பவரைக் கைது செய்துள்ளது. இவர் மீது கொலை உட்படப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் சிலர் வெளிநாடுகளில் சென்று பதுங்கி இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோலத் தான் வெளிநாடுகளில் தேடப்படும் சில குற்றவாளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். அப்படி இந்தியாவில் பதுங்கிய ஒருவரை தான் இப்போது அமெரிக்க எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.

டாப் 10 குற்றவாளிகள்
உலகின் டாப் 10 மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படும் சிண்டி ரோட்ரிகஸ் சிங் என்பவர் கான் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றது, பிடிவாரண்டில் இருந்து தப்பித்தது, குழந்தையை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது.
தனது 5 வயது மகன் நோயல் ரோட்ரிகஸ் அல்வாரெஸ் கொலை தொடர்பான வழக்கில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது மகனின் கொலை வழக்கில் சிக்கிய சிண்டி, வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க அமெரிக்காவிலிருந்து தப்பியிருக்கிறார். கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி ரோட்ரிகஸ் சிங்கிற்கு எதிரான இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இந்தியா உட்பட எல்லா உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.
இந்திய அதிகாரிகள்
அவர் இந்தியாவில் இருக்கும் தகவல் கிடைத்தவுடன் நாடு கடத்தக் கோரிக்கை விடுத்து இந்திய அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போலுடன் இணைந்து எஃப்.பி.ஐ நடத்திய ஆபரேஷனில் சிண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.. எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். அவர் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டெக்சாஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது.
எஃப்.பி.ஐ இயக்குநர் பாராட்டு
இந்திய அதிகாரிகள் மிகச் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தாக எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக காஷ் படேல் தனது ட்விட்டரில், "வழக்கு ஆரம்பித்த டெக்சாஸ் அதிகாரிகள், அமெரிக்க நீதித்துறை, அத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட இந்திய அதிகாரிகளுக்கு நன்றி. எஃப்.பி.ஐ அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "எஃப்.பி.ஐ-யின் டாப் 10 மிகவும் தேடப்படும் குற்றவாளியாக இவர் இருந்தார். இவர் ஒரு ஆபத்தான குற்றவாளி.. வெளிநாட்டில் ஒளிந்து, நீதியிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தார். நீதிக்கு எல்லைகள் இல்லை.. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அமெரிக்க மக்களை வேட்டையாடுபவர்களை ஒருபோதும் தப்பிக்க விட மாட்டோம்" என்று எச்சரித்துள்ளார்.
பின்னணி
கடந்த 2023 மார்ச் மாதம் இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. சிண்டியின் 5 வயது மகன் மாயமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நோயலுக்கு பல உடல்நல மற்றும் வளர்ச்சிப் பிரச்சனைகள் இருந்தன. கடுமையான வளர்ச்சிக் குறைபாடு, நுரையீரல் நோய், நுரையீரல் வீக்கம், எலும்பு அடர்த்திப் பிரச்சனை, பார்வைக் குறைபாடு ஆகியவை அடங்கும். மேலும், போலீசார் விசாரணை நடத்தியபோது, பொய்யான தகவல்களையும் சொல்லியிருக்கிறார்.
போலீசார் இப்படி நேரில் வந்து விசாரித்த சில நாட்களிலேயே நாள் சிண்டி சிங் அமெரிக்காவில் இருந்து தப்பிவிட்டார். அவர் தனது கணவர் மற்றும் ஆறு குழந்தைகளுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார். அதைத் தொடர்ந்தே அவரை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications