நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போலவே மாறியது.. முத்ரா கடன் திட்டத்தில் இவ்வளவு நன்மையா?
டெல்லி: முத்ரா கடன் திட்ட உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி எந்தவித சொத்தையும் அடமானம் வைக்காமல் 20 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த 20 லட்சம் வரை கடன் பெறுவதில் சில விதிமுறைகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த கடன் கிடைக்காது. வெற்றிகரமாக கடனை திருப்பி செலுத்த முனைவோர்களுக்கே இந்த 20 லட்சம் கடன் உதவி கிடைக்கும். இதை பற்றி சற்று விவரமாக பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு முத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டம் எதற்கு என்றால், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் நாட்டில் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்கு தான். அதேபோல் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிய அரசு, எந்தவித சொத்தையும் அடமானம் வைக்காமல் ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கியது. வட்டியும் மிக குறைவு ஆகும்.

இந்த முத்ரா கடன்களை மத்திய அரசு நேரடியாக வழங்காமல் வங்கிகள் மூலமாக வழங்குகிறது. நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த முத்ரா கடன்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக சொல்வது என்றால், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற 27 பொதுத் துறை வங்கிகள் முத்ரா கடன்களை வழங்கி வருகின்றன.
இதேபோல் ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிட்டி யூனியன் பேங்க் போன்ற 18 தனியார் வங்கிகளும் முத்ரா கடன்களை வழங்கி வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மைக்ரோ நிதி சேவை நிறுவனங்கள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளும் முத்ரா கடன்களை வழங்கி வருகின்றன.
முத்ரா கடன் வகைகள்: இந்த முத்ரா கடன் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதாவது சிஷு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும் கடனுதவிகள் முத்ரா திட்டத்தில் வழங்கப்படுகிறது.இந்த கடன்கள் எல்லாமே எந்தவித சொத்தையும் அடமானம் வைக்காமல் கடன் பெறும் திட்டம் ஆகும்.
இதற்கிடையே 2024-2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தபடி, அந்த திட்டத்தின் கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, “புதிய வகை 'தருண் பிளஸ்’ திட்டத்தின் படி ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படும். ஏற்கனவே தருண் கடன் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகையின் இந்த உயர்வு, முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால தொழில்முனைவோரை வலுவான தொழில்முனைவோர் ஆக்கும் அரசின் கடமையை உறுதி செய்யும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முத்ரா திட்டத்தில் கடன் பெற தகுதிகள்: பெண்கள், தனியுரிமை நிறுவனம், கூட்டு நிறுவனம் அல்லது வேறு எந்த நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு தனிநபரும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்) கடன்களின் கீழ் கடன் பெற தகுதி உள்ளவர்கள் ஆவர். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடையாளச் சான்று, குடியிருப்புச் சான்று, விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இதற்கு வேண்டும்.
முத்ரா கடன் வட்டி விகிதம்: முத்ரா கடனுக்கான வட்டி விகிதம் விண்ணப்பிக்கும் நபர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இருக்கும். அதாவது ஏற்கனவே அவர் கடன் வாங்கியதை முறையாக திருப்பி செலுத்தியவர் என்றால் எளிதாக கடன் கிடைப்பதுடன் வட்டியும் குறைவாக இருக்கும். கடன் வட்டி விகிதம் அந்தந்த வங்கிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி: கடன் வேண்டுவோர் உத்யாமி மித்ரா இணையதளத்திற்கு (UdyamiMitra) செல்ல வேண்டும்.
இதைத் தொடர்ந்து பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண்ணை பதிவிட வேண்டும். ஆதார் உடன்கூடிய மொபைல் எண்ணிற்குக் கிடைக்கும் OTP-ஐ உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பத்திற்குள் செல்ல வேண்டும். தொடர்ந்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் அது பகுப்பாய்வு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
முத்ரா கடன் நிராகரிப்பு: அதன்பின்னர் உங்களுக்கு தரப்படும் சமர்ப்பிப்பு எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து விண்ணப்பத்தின் நிலையை இதே இணையதளத்தில் சில நாட்களில் காணமுடியும். சரியான சான்றிதழ்கள் இருப்பின், கடனை திரும்ப செலுத்தக்கூடிய நிலை இருப்பதை வங்கிகள் ஆராயும். பின்னர் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இல்லையென்றால் அதற்கான காரணத்தை விண்ணப்ப சமர்பிப்பு எண் வாயிலாக தெரிவிக்கப்படும். அதாவது நிராகரிப்புக்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications