அமித்ஷா குறித்து அவதூறு.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் கிருஷ்ணநகர் எம்.பியான மொய்தரா பங்கேற்றிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடுருவல் பிரச்சினையை கையாளாததற்கும், திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை குற்றம் சாட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

"ஊடுருவல்காரர்கள் பற்றி அவர்கள் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவின் எல்லை ஐந்து படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் நேரடி பொறுப்பு. ஆக தோல்வி யாருடையது?" என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மொய்த்ரா மீது கோட்வாலி காவல் நிலையத்தில் சந்தீப் மஜும்தார் என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரை தொடர்ந்து தற்போது மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 196 மற்றும் 197-ன் கீழ் மனா முகாம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோபால் சமந்தோ என்கிற நபர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான நிதின் நபின், இது குறித்து கூறுகையில், "ஒரு பெண்மணி இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது, இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எவ்வளவு வன்முறையானவர்களாக மாறிவிட்டார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவும். வங்காளத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. எங்கள் உள்துறை அமைச்சர் அதற்காக தொடர்ந்து போராடி வருகிறார், அவர் அவற்றை சரிசெய்து வருகிறார்.
அதனால் அவர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது. ஆனால் உள்துறை அமைச்சருக்கு அனைவரின் ஆதரவும் உண்டு என்பதை மொய்த்ரா அறியவில்லை" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications