இந்த ஐந்து விஷயங்கள் தான்! மாநில தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோற்க காரணம்!
Recommended Video
டெல்லி: மாநில சட்டசபை தேர்தல்களில் அண்மைக்காலமாக தோற்றுவரும் பாஜக இன்று டெல்லி சட்டசபை தேர்தலிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது.
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.
2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தோல்வி அடைந்தது. இதனால் அங்கு பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் சிவசேனாவின் ஆசையால் அங்கும் ஆட்சியை பறிகொடுத்து. ஜார்க்கண்டில் கடைசி நேரத்தில் கூட்டணி கட்சியை கழட்டிவிட்டதால் அங்கும் தோல்வியை தழுவியது. இப்போது டெல்லியிலும் தோற்றுள்ளது. இப்படி அடுத்தடுத்து தோற்க ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
மோடியை அதிகம் நம்பியிருத்தல்
நரேந்திர மோடியின் கவர்ச்சி தேசிய அளவில் பாஜகவுக்கு ஒரு பெரிய வரமாக இருந்து வருகிறது. இருந்து வருகிறது. ஆனால் உள்ளூர் சிக்கல்களை தீர்க்க அதிக அளவில் பணியாற்ற வேண்டிய மாநில மட்டத்தில் தலைவர்களை தேர்ந்தெடுக்க தவறிவிட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக, டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும் கடந்த முறை பாஜக 56.9% வாக்குகளைப் பெற்று வென்றது. ஆனால் எழுபது சட்டமன்ற இடங்களில் 8 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக 38.7% வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் பாஜக லோக் சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையே 18.2% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மோடியின் மீது கட்சியின் அதிகப்படியான நம்பிக்கை மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு நம்பகத்தன்மையை வழங்க இயலாமை போன்றவையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
உள்துறை அமைச்சர்
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பாஜக நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றை இழந்துள்ளது . ஜார்கண்ட், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது, ஆனால் சிவசேனாவுடனான பகை காரணமாக அரசாங்கத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இதன் மூலம் அமித் ஷா உள்துறை அமைச்சரான பின்னர் பாஜகவில் தடுமாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. முன்னதாக அமித்ஷா பாஜக தலைவராக இருந்த போதும் அந்த கட்சி தோற்று இருந்தாலும் லோக்சபா தேர்தலுக்கு பிறகான தோல்விக்கு அமித்ஷாவின் வியூகம் சரியாக செல்லுபடியாகவில்லை என்று சொல்கிறார்கள்.
கூட்டணி இன்மை
பாஜகவின் தோல்விகளில் ஒரு முக்கியமான காரணி கூட்டணிகளை உருவாக்க இயலாமை. மகாராஷ்டிராவில், ஒற்றை மிகப்பெரிய கட்சியாக இருந்தபோதிலும், அது ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. பாஜக அதன் நீண்ட கால அரசியல் கூட்டாளியான சிவசேனாவுடனான பகை அதற்கு தடை போட்டது. ஜார்க்கண்டில் கூட, பாஜக பிராந்திய கட்சிகளுடன் வாக்கெடுப்புக்கு முன்பாக சரியாக கூட்டணி அமைக்கவில்லை, இதனால் வாக்குகளை பலப்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு இடம் திறந்து விடப்பட்டது. பாஜக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏ.ஜே.எஸ்.யு (அனைத்து ஜார்கண்ட் மாணவர் கூட்டணி) உடன் கூட்டாக ஆட்சி செய்து வந்தது, இருப்பினும், அது தேர்தலுக்கு முன்னர் அந்த கூட்டணியை உடைத்தது. இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் ஜெயித்திருக்க கூடும்.
மத அரசியல்
"இந்து-முஸ்லீம் பிரச்சினை", தேர்தல் பேரணிகளில் பாகிஸ்தானைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது, குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்புக்களுக்கு எதிரான குரல் கொடுக்கும் பிரச்சாரம், பாஜகவுக்கு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியாக தெரிகிறது. டெல்லி தேர்தலில் பாஜக தனது வாக்குப் பங்கை 7% அதிகரித்தது, ஆனால் பாஜகவால் இந்த பிரச்சாரம் மூலம் மேலும் ஐந்து இடங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆனால் பெரிதாக கைகொடுத்தாக தெரியவில்லை.
பொருளாதார பிரச்சனை
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சில காலமாக பாஜக அரசாங்கத்தால் சரி செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேட்டு வருகின்றன., குறிப்பாக காங்கிரஸ், நிதி மந்தநிலையை டெல்லி தேர்தலில் முக்கிய பிரச்சினையாக பயன்படுத்தியது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா என எப்போதும் பேசும் பாஜக, பொருளாதார பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அதற்கு எதிர்வினை பெரிய அளவில் ஆற்றவில்லை.