ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகள் தடையின்றி இயங்க வேண்டும்.. போர் பதற்றத்துக்கு இடையே நிதி அமைச்சர் ஆர்டர்
டெல்லி: எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், ஏடிஎம்களில் தடையற்ற பணம் கிடைப்பது, தடையற்ற யுபிஐ மற்றும் இணைய வங்கி சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அத்தியாவசிய வங்கி வசதிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் மத்திய அரசு பொது மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ATM இயந்திரங்கள் 2 - 3 நாட்களுக்கு மூடப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் உடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.
இந்தக் கூட்டத்தில், அனைத்து டிஜிட்டல் மற்றும் முக்கிய வங்கி உள்கட்டமைப்புகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய சைபர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தரவு மையங்களின் வழக்கமான தணிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, இந்த சவாலான காலங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் வங்கி மற்றும் நிதித் துறையின் முக்கிய பங்கை சீதாராமன் வலியுறுத்தினார். அனைத்து வங்கிகளும் முழுமையாக விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு நெருக்கடியையும் கையாளத் தயாராக இருக்கவும், தடையற்ற வங்கி மற்றும் நிதி சேவைகளை, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், அவசரகால நெறிமுறைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு சோதிக்கப்பட்டு, நேரடி மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் இரண்டும் தடையின்றி செயல்பட வேண்டும். எல்லைக்கு அருகில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் சரியான நேரத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் காணவேண்டும் என்றும் தடையற்ற வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications