"பாஜகவில் சேர சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.." அடுத்து கெஜ்ரிவால் சொன்ன பரபர மேட்டர்! அதிர்ச்சி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவுக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை பாஜகவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகப் பரபர கருத்தைக் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி தலைவராகவும் டெல்லி முதல்வராகவும் இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழலை ஒழிப்போம் என்பதை முழக்கமாக வைத்து டெல்லியில் ஆட்சியைப் பிடித்த இவர், பஞ்சாபிலும் தனது கட்சியை வெற்றிகரமாக வளர்த்தெடுத்துள்ளார்.

இப்போது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அவர் இருக்கும் நிலையில், பாஜகவுக்கும் அவருக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே அவர் பாஜக மீது மிகப் பெரிய குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி: ஏற்கனவே ஆம் ஆத்மி ஆட்சியை காலி செய்ய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தை பாஜக நடத்துவதாகக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் தன்னை பாஜகவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "எங்களுக்கு எதிராக அவர்கள் எந்த சதியும் செய்ய முடியும்.. நானும் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை.
பரபர புகார்: என்னை பாஜகவில் சேரச் சொல்கிறார்கள்.. அதன் பின்னர் அப்படியே என்னை காலி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.. ஆனால் நான் ஒருபோதும் பாஜகவுக்குச் செல்ல மாட்டேன் என்று சொன்னேன். என்ன ஆனாலும் சரி நான் பாஜகவில் மட்டும் இணையவே மாட்டேன்" என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டில் 40 சதவீதத்தைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செலவிடுகிறது. ஆனால், பாஜ தலைமையிலான மத்திய அரசு தேசிய பட்ஜெட்டில் 4 சதவீதத்தை மட்டுமே இந்த துறைகளுக்குச் செலவிடுகிறது.. இன்று அனைத்து மத்திய விசாரணை ஏஜென்சிகளும் எங்களைத் தான் குறிவைக்கிறார்கள்.
தவறுகள் என்ன: மனிஷ் சிசோடியா செய்த தவறு அவர் நல்ல பள்ளிகளை உருவாக்கியது தான். சத்யேந்தர் ஜெயின் செய்த தவறு, அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கியதுதான். பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மணீஷ் சிசோடியா பாடுபடவில்லை என்றால் அவரை கைது செய்திருக்க மாட்டார்கள். எங்களை அழிக்க அனைத்து வகையான சதிகளையும் உருவாக்கினர், ஆனால் எங்களைத் தடுக்க முடியவில்லை
மேலும், பொதுமக்கள் தங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்குத் தந்து வருகிறார்கள். அதுவே எங்களுக்கு போதும்.. அதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை" என்றும் அவர் தெரிவித்தார்..
குதிரை பேரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்துவதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக நோட்டீஸ் வழங்க டெல்லி போலீசார் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷியின் வீட்டிற்கு சென்றனர். இருப்பினும். அங்கு அவர் இல்லாத நிலையில் அங்கிருந்த அதிகாரியிடம் நோட்டீஸ் கொடுத்து வந்தனர். இந்த நோட்டீசுக்கு திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 5) பதில் அளிக்க அதிஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் தான் கெஜ்ரிவால் இந்த பரபர கருத்தைக் கூறியுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் டெல்லி போலீசார், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்டுப்பாட்டில் இருக்காது. அது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications