'மோடி தான் எங்க டாடி..' என்ற ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. பாஜகவில் ஐக்கியம்? பரபர தகவல்
சென்னை: தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் வகையிலேயே பேசி வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அதிமுகவிலிருந்த போதிலும், பாஜகவுக்கு கிட்டதட்ட நேரடியாக ஆதரவாக இருக்கும் கருத்துகளையே தொடர்ந்து கூறி வந்தார்.
இந்தச் சூழலில் அவர் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபைத் தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார். இருப்பினும், இந்த முறை சொந்த தொகுதியிலேயே அதிருப்தி அலை அதிகமாக இருந்ததால் இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களமிறங்கினார். இருப்பினும் அவர், திமுக வேட்பாளர் தங்கப் பாண்டியனிடம் சுமார் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

சர்ச்சை பேச்சு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பல சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்தார். குறிப்பாக பல்வேறு தருணங்களில் பாஜகவுக்கு நேரடியாக ஆதரவாக இருக்கும் கருத்துகளையும் தொடர்ந்து கூறி வந்தார். நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கவாதி ஒரு இந்து என மநீம தலைவர் கமல் பேசியதற்கு, அவரது நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறி ஷாக் கொடுத்தவர்.

மோடி தான் எங்க டாடி
அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "பின்னர் மோடி தான் எங்கள் டாடி. பிரதமர் இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது" என்று கூறியது தமிழ்நாடு அரசியில் பெரும் பரபரப்பானது. இப்படித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால், அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

வருத்தம்
இருப்பினும், இதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை கொள்வதாக ராஜேந்திர பாலாஜி, சட்டசபைத் தேர்தல் வரையிலும்கூட தனது சர்ச்சை சரவெடிகளை வெடித்துக் கொண்டே தான் இருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாத இறுதியில், கடந்த காலங்களில் நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன் என்றும் தற்போது தான் அரசியலில் பக்குவமாகச் செயல்பட்டு வருகிறேன் என்றும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திடீர் டெல்லி பயணம்
அதன் பிறகு இத்தனை காலமாக அமைதியாக இருந்த ராஜேந்திர பாலாஜி, இன்று காலை 11 மணியளவில் திடீரென டெல்லி சென்றுள்ளது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த பயணத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ராஜேந்திர பாலாஜி சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் தற்போது டெல்லியிலுள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையலாம் என்றும் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.

பாஜகவில் ஐக்கியம்
ஆனால், ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ள சிலர், தனது மீதான சொத்துக் குவிப்பு தொடர்பாகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், அதில் மேல் முறையீடு வக்காலத்து வழக்குப் போடுவதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வந்த ராஜேந்திர பாலாஜி, தலைநகர் டெல்லியில் என்ன தான் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
Recommended Video

சொத்துக் குவிப்பு வழக்கு
முன்னதாக, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களைத் திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications