ஜனாதிபதி தேர்தல்: சட்டென திரும்பிய தலைகள்.. சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
பணத்தால் விளையாடினார்கள்.. கட்சிகளை உடைத்தார்கள்! எல்லாம் ஜனாதிபதி தேர்தலுக்கே -யஷ்வந்த் சின்ஹா பரபர
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாக்களித்தார்.
மன்மோகன் சிங்
அந்த வகையில் 2 முறை இந்திய பிரதமராக பதவி வகித்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்துக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார்.
உடல் நலக்குறைவு
இதே நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக நடமாடிய மன்மோகன் சிங், இன்று உடல் நலிவடைந்து சக்கர நாற்காலியில் வந்தபோது நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரது பார்வையும் அவரை நோக்கியே இருந்தது. பிரதமர் பதவியிலிருந்து விலகி பின்னர் கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இதய நோய் தொடர்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.