முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படை டிஜியாக நியமனம்
டெல்லி: சிபிஐ அமைப்பின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2018ல் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரு உயரதிகாரிகளையும் கடந்த வருடம், கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது.
இதன்பிறகு, சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா, சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார் சர்மா, சிபிஐ டிஐஜி மணீஷ் குமார் சின்ஹா, சிபிஐ கண்காணிப்பாளர் ஜெயந்த் ஜே.நாயக்நவாரே ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருந்தது.
ராகேஷ் அஸ்தானா, தற்போது, சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோவின் இயக்குநர் ஜெனரலாக (பி.சி.ஏ.எஸ்) பணியாற்றிய நிலையில், இன்று மத்திய அரசு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், இவரை பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமனம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பதவியில் சேர்ந்த தேதி முதல் 2021ம் ஆண்டு ஜூலை 31 வரை எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரலாக பதவியில் தொடருவார் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) டி.ஜி என்ற, கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.
அஸ்தானாவின் பெயர் 2018ல் 'சிபிஐ vs சிபிஐ' என்ற மோதல் நிலை உருவானபோது நாடு முழுக்க கவனம் ஈர்த்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவரும், மொயின் குரேஷி ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவருமான தொழிலதிபர் சனா சதீஷ், 2018 அக்டோபர் 4ம் தேதி, இடைத்தரகர்கள் மூலம் அஸ்தானாவுக்கு ரூ .2.95 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார் அலோக் குமார்.
1984 ஆம் ஆண்டு குஜராத் கேடர் அதிகாரியான அஸ்தானா, 2002 ல் கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து போன்ற சில முக்கிய வழக்குகளை விசாரித்தவர். 1997 ஆம் ஆண்டில் மாட்டுத் தீவன ஊழலில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை கைது செய்தார். அப்போது அவர் சி.பி.ஐ.யில் போலீஸ் சூப்பிரண்டு பதவி வகித்தார்.












Click it and Unblock the Notifications