இந்தியாவுக்கு போட்டி, போட்டு உதவும் உலக நாடுகள்.. பிரான்ஸ், அயர்லாந்து செய்யும் பேருதவியை பாருங்க!
டெல்லி: 8 உயர்திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், 28 வென்டிலேட்டர் படுக்கைகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.
இந்தியா முழுவதும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனா வைரஸ் 2-வது அலை பெரும் பேரழிவை கொடுத்துள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டுணர்ந்துள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.

இந்தியாவுக்கு பிரான்ஸ் உதவி
இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவும் பிரான்சும் எப்போதும் கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணை நிற்கின்றன. எங்கள் நட்பின் மையத்தில் ஒற்றுமை மற்றும் நட்பு உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் மக்கள் மிகவும் நெருக்கமாக உள்ளனர், எனவே இந்த கடினமான நேரத்தில், பிரான்ஸ் இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் முழுமையாக நிற்கிறது.

ஆக்சிஜன் கொள்கலன்கள்
8 உயர்திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். ஒரு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்ஸிஜனை வழங்க முடியும். இந்த ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் மூலமாகவும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்ப முடியும். இதனுடன் 5 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொள்கலன்களும் இந்தியாவுக்கு வழங்கப்படும் ஒரு ஆக்சிஜன் கொள்கலனில் இருந்து 10 ஆயிரம் நோயாளிகள் ஆக்ஸிஜனைப் பெற முடியும்.

வென்டிலேட்டர் படுக்கைகள்
இது தவிர 28 வென்டிலேட்டர் படுக்கைகள் மற்றும் 200 எலக்ட்ரிக் சிரிஞ்ச் பம்புகளும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும். பிரான்ஸ் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து நாடும் இந்தியாவுக்கு 700 ஆக்ஸிஜன் செறிவுகளை அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது.

அயர்லாந்தும் உதவி
இது தொடர்பாக அயர்லாந்து தூதர் பிரெண்டன் வார்ட் கூறுகையில், ' 700 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இப்போது இந்தியாவுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். மேலும் வென்டிலேட்டர்கள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற கூடுதல் உதவிகளை இந்தியாவுக்கு செய்வோம்' என்றார். பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு போட்டி, போட்டி உதவி புரிந்து வருவது வேதனையில் வாடும் இந்திய மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications