ஒரே நாளில் 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..மத்திய அரசு விளக்கத்துக்குப் பின்னும் அச்சுறுத்தல்!
டெல்லி: நாட்டின் விமான சேவைகளை முடக்கும் வகையில் ஒரே நாளில் 95 விமானங்களுக்கு சமூக விரோதிகள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்த பின்னரும் இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு பயணிகள் விமான சேவைகளை முடக்கும் வகையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 175 விமானங்களுக்கு இதேபோல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இன்று ஒரே நாளில் மட்டும் தற்போது வரை 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகாஷா, ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.
சமூக விரோதிகள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே இத்தகைய மிரட்டல்களை விடுவித்து வருவது டெல்லி போலீசாருக்கு சவாலாகவும் மாறி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், இத்தகைய மிரட்டல்கள் விடுவிப்பது கடுமையான குற்றம் என எச்சரித்தார்.
டெல்லியில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளின் விமான சேவைகளுக்கும் இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரிக்கை விடுத்த பின்னரும் இம்மிரட்டல்கள் நீடிக்கின்றன. ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு விமான சேவை நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.












Click it and Unblock the Notifications