கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நினைவிருக்கா? சிபி ராதாகிருஷ்ணன் குறித்து பேசும்போது மோடி சொன்ன விஷயம்
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முதல் நாளான இன்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். சமூக சேவையைத் தனது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் சிபி ராதாகிருஷ்ணன் என்று சொன்ன பிரதமர் மோடி, இது தனக்கு மறக்கவே முடியாத ஒரு பெருமையான தருணம் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்குகிறது. நமது நாட்டில் துணை ஜனாதிபதியே ராஜ்யசபாவை வழிநடத்துவார். அதன்படி துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் முதல்முறையாக ராஜ்யசபாவை வழிநடத்த இருக்கிறார். இன்று சிபி ராதாகிருஷ்ணன் தலைமையில் ராஜ்யசபா கூடியது.

பிரதமர் மோடி
இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், இன்று நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ராஜ்யசபாவில் மேலும் பேசுகையில், "சபாநாயகர் அவர்களே, இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இது ஒரு பெருமையான தருணம். உங்களை வரவேற்பது எங்களுக்குப் பெருமை. இந்த அவையின் சார்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
விவசாயக் குடும்பம்
இந்த அவையில் அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவையின் மாண்பைக் காத்து, உங்களின் மாண்பையும் எப்போதும் போற்றுவார்கள் என உறுதியளிக்கிறேன். நமது சபாநாயகர் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல் களம் அதன் ஒரு பகுதியாக இருந்தாலும், சமூக சேவைதான் அவரது முதன்மை நோக்கமாக இருந்தது. அவர் சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார். சமூக சேவையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அவர் ஒரு வழிகாட்டி!
ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, அங்குப் பழங்குடி சமூகங்களுடன் நீங்கள் ஏற்படுத்திய பிணைப்பைக் கண்டேன். சிறிய கிராமங்களுக்குக் கூட நீங்கள் நேரில் சென்றதை ஜார்க்கண்ட் முதல்வர் என்னைப் பார்க்கும்போது எல்லாம் பெருமையுடன் குறிப்பிடுவார். கிடைக்கும் வாகனத்தில் பயணித்து, சிறிய இடங்களில் கூட தங்கியுள்ளீர்கள். இதுவே உங்கள் சேவையைக் காட்டுகிறது..
கோவை குண்டுவெடிப்பு
நீங்கள் டாலர் நகரத்தில் (திருப்பூரை குறிப்பிடுகிறார்) பிறந்தீர்கள்.. அதற்கு அதன் தனித்தன்மை உண்டு. இருப்பினும், சமூக சேவையை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். டாலர் நகரில் வாழும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை குடும்பங்களுக்காக அக்கறை காட்டினீர்கள்.
இந்த இடத்தில் நான் இரு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை உங்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை என நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். சிறுவயதில் நீங்கள் அவிநாசி கோயில் குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கிவிட்டீர்கள். நல்வாய்ப்பாகக் காப்பாற்றப்பட்டீர்கள். அப்போது "நான் எப்படி உயிர் பிழைத்தேன் என தெரியவில்லை" என்று நீங்கள் கூறினீர்கள். கடவுளின் கருணை தான் உங்கள் உயிரை காப்பாற்றியுள்ளது..
காசி பயணம்
அடுத்து இன்னொரு சம்பவம்.. அத்வானியின் கோவை வருகைக்கு சற்று முன்பு, ஒரு பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். அது ஒரு கொடூரமான குண்டுவெடிப்பு, அதில் நீங்கள் நூலிழையில் உயிர் பிழைத்தீர்கள். அதன் பிறகு தான் நீங்கள் முதல்முறையாக காசிக்கு சென்றீர்கள்.
அதற்கு முன்பு, நீங்கள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் காசிக்கு முதன்முதலில் சென்றபோது, அங்கு பூஜை செய்தீர்கள். கங்கா அன்னையின் ஆசீர்வாதம் பெற்றீர்கள். அதன் பிறகே அசைவம் சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்ததாக என்னிடம் சொன்னீர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் மோசமானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் காசி மண் உங்கள் மனதை மாற்றியுள்ளது. வாரணாசி எம்பி என்ற முறையில், இதை எப்போதும் எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன்" என்றார்.












Click it and Unblock the Notifications