பாராளுமன்ற கூட்டத்தொடர்.. வேளாண் சட்டம் ரத்து.. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. முதல் நாள் நடந்தது என்ன?
டெல்லி: 2021 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் முதல் நாளே பெரும் பரபரப்பிற்கு இடையே வேளாண் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. கடும் அமளிக்கு இடையே இன்று முதல் நாள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட உள்ளது. இந்த நிலையில்தான் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
வேளாண் சட்டம் ரத்து, கிரிப்டோகரன்சி கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் காரணமாக இந்த மசோதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலையில் அனைத்து கட்சி கூட்டங்களை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் அவை கூடியது.

மோடி பேச்சு
அவைக்கு முன்பாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளிக்க தயார். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமானது. தற்போதைய குளிர்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் ஆக்கபூர்வமான வாதத்தை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அனைவரும் தரவேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.

இரு அவையிலும் இரங்கல்
காலை 11 மணிக்கு அவை தொடங்கியது. மறைந்த எம்பிக்கள் செங்குட்டுவன், கல்யாண் சிங், ஆஸ்கார் பெர்னாண்டஸ், கோடில் பிரசாத் அனுராகி, ஷியாம் சுந்தர் சோமானி, ராஜ்நாராயண் புதோலியா, தேவ்வ்ரத் சிங் மற்றும் ஹரி தன்வே பண்ட்லிக் ஆகியோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆஸ்கார் பெர்னாண்டஸ், கே பி ஷானப்பா, டாக்டர். சந்தன் மித்ரா ஹரி சிங் நல்வா, மோனிகா தாஸ் மற்றும் அபானி ராய் ஆகிய எம்பிக்களுக்கு இன்று மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பதவி ஏற்பு
இன்று மக்களவையில் பிரதிபா சிங் மற்றும் கியானேஸ்வர் பாட்டில் ஆகிய இரண்டு பேரும் எம்பிக்களாக உறுதிமொழி ஏற்றனர். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் எம்.எம். அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.

அமளி
இதற்கு இடையில் அவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் முன் அதை பற்றி பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து தப்பி ஓடுகிறார் பிரதமர் மோடி. அவர் அவையில் எதுவும் பேசவில்லை. அவையில் விவாதம் செய்யாமல் மசோதா செய்வது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.

மோதல்
இதையடுத்து அவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டனர். விவாதம் செய்யாமல் மசோதாவை தாக்கல் செய்வதை ஏற்கவே முடியாது என்று விமர்சனம் வைத்தனர். அமளியால் இரண்டு அவையும் சில மணி நேரங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

விவாதம் இன்றி ஏற்பு
இதன் பின் 12 மணிக்கு அவை தொடங்கியது. அதன்பின் 12:06 மணிக்கு மக்களவையில் விவசாய சட்டம் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதம் இன்று 12.10 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதோடு. மாநிலங்களவையில் மசோதா தொடர்ந்து விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 3 விவசாய சட்டங்களும் ரத்தாகி உள்ளது.

சஸ்பெண்ட்
இன்னொரு பக்கம் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கையாக 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிபிஎம்மின் இளமாறன் கரீம் ஆகியோர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து அவையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications