ஆவின் தயிரில் இந்தி கட்டாயமில்லை.. முதல்வர் ஸ்டாலின் சீற்றத்திற்கு பிறகு வாபஸ் பெற்ற மத்திய அமைப்பு
டெல்லி: ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிட தேவையில்லை என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அறிவிக்கையையும் திரும்ப பெற்றது.
தமிழகத்தின் ஆவின், கர்நாடகாவின் நந்தனி ஆகிய மாநில கூட்டுறவு சங்கங்களின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் தயிர் என்றும் கன்னடத்தில் மொசுரூ என்றும் எழுதப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் தமிழகம், கர்நாடகா அரசுகளுக்கு இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் ஆவின், நந்தினி ஆகிய தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிடுமாறும் தேவைப்பட்டால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழியில் அச்சிடலாம் என்றும் தெரிவித்திருந்தது.

தமிழக அரசு
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதாவது தாய்மொழியான தமிழை விட்டு விட்டு நாங்கள் ஏன் இந்தியில் அச்சிட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பால்வளத் துறை அமைச்சர்
இந்த நிலையில் இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தயிர் பாக்கெட் மீது தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்கவில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் காட்டம்
மேலும் நேற்றைய தினம் தஹி குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு எதிர் கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! இவ்வாறு தனது எதிர்ப்பை முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார்.

அறிவிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு
இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆவின் தயிரில் தஹி என்று இந்தியில் அச்சிட தேவையில்லை. தயிரை மொசுரூ, ஜாமூத் டவுத், பெருகு, தயிர் என எப்படி வேண்டுமானாலும் அச்சிட்டுக் கொள்ளலாம் என கூறி, தஹி என இந்தியில் அச்சிட வேண்டும் என கூறிய அறிவிக்கையை வாபஸ் பெற்றது. இந்தி திணிப்பு இல்லை இல்லை என கூறி கொண்டு இது போன்ற சில வழிகளில் இந்தியை புகுத்த முயற்சித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்வர் காட்டமாக ட்வீட் போட்ட நிலையில் தற்போது அறிவிக்கையை வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications