நாடு முழுவதும் தீயாய் பரவும் கொரோனா... முழு ஊரடங்குதான் ஒரே தீர்வு என்கிறார் ராகுல்காந்தி
நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வு என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ராகுல்காந்தியும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த கொரோனா பாதிப்பு 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,449 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3,20,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது

வைரஸ் தாக்கம்
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளிட்டவைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை போன்றவை மறு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனாவின் வீச்சு அதிகமாகி வருவதை தடுக்க அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் நோக்கில், முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

லாக்டவுன் ஒரே தீர்வு
இந்நிலையில் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானம் உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடி அறிவிப்பாரா?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பேசி பிரதமர் மோடி நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறினார். முழு முடக்கம் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். டெல்லி, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications