ஜி 20 மாநாட்டின் வெற்றி ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல: லோக்சபாவில் பிரதமர் மோடி
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல; ஒட்டுமொத்த நாட்டின் வெற்றி; 140 கோடி மக்களின் வெற்றி என நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: வங்கதேச விடுதலையை நமது நாடாளுமன்றம் பார்த்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நமது நாடாளுமன்றம் முழு ஆதரவைத் தந்தது. இதே நாடாளுமன்றம்தான் இந்திராவின் எமர்ஜென்சிக்கும் சாட்சியாக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சியில் ஓட்டுக்கு பணம் விவகாரத்தையும் சந்தித்தது.

2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நாடு அந்த தாக்குதலை எளிதில் மறந்துவிடாது. நாட்டைப் பாதுகாக்க நெஞ்சிலே தோட்டாக்களை தாங்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து, ஜிஎஸ்டி அறிமுகம், ஒரே பதவி ஒரே ஊதியம் என முக்கியமான சட்டங்களையும் இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்துள்ளது.
ஜி 20 மாநாட்டின் வெற்றி என்பது ஒரு கட்சியின் வெற்றி அல்ல. ஒட்டுமொத்தமான 140 கோடி இந்தியர்களின் வெற்றி. சந்திரயான் 3-ன் வெற்றி என்பது இந்தியாவால் மட்டும் கொண்டாடப்படவில்லை. ஒட்டுமொத்த உலகமும் பெருமிதப்படுகிறது. இது 140 கோடி இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்துகிறது. சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதித்த அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன். ஜி 20-ன் வெற்றி 140 கோடி இந்தியர்களின் மகத்தான வெற்றி.
இந்தியாவை உலக நாடுகள் இன்று உற்ற நண்பனாக பார்க்கின்றன. இந்தியா தற்போது தன்னம்பிக்கை மிக்க நாடாக மிளிர்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications