காங். தலைவர் தேர்தல்.. ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.. நான் போட்டியிடுகிறேன்.. அசோக் கெலாட் உறுதி!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளில், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்க டிவிக்கு புது “ஓனர்” வந்துட்டாரு - என்டிடிவி செய்தியாளரிடம் ராகுல் பதில்.. அதானி மீது அட்டாக்
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் செப்.30 வரை நடைபெற இருக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்புமனுவைப் வாபஸ் பெறுவதும் அக். 1 மற்றும் அக்.8 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப்பதிவு அக்.17ம் தேதி நடைபெறும் என்றும், அக்.19ம் தேதி வாக்கு எண்ணப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மூத்த தலைவர்கள் ஆர்வம்
ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநில காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தலைவர் தேர்தலில் போட்டியிட சசி தரூர், அசோக் கெலாட், திக் விஜய் சிங், மனீஷ் திவாரி உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வம் காட்டி வந்தனர். இதுதொடர்பாக அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.
அசோக் கெலாட் அறிவிப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அசோக் கெலாட் கூறுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினர் உறுதியாக இருக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார்.
முதல்வர் பதவி ராஜினாமா?
தொடர்ந்து, தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பேன். ஒருவேளை நான் காங்கிரஸ் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் அஜய் மேகன் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள். இந்தியாவில் தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
24 ஆண்டுகள்
இதன் மூலம் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 24 ஆண்டுக்கு பின் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர், தலைவராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.