குற்றம் செய்தது நிரூபணம்.. கொரோனா மருந்துகளை கம்பீர் அறக்கட்டளை பதுக்கியது உறுதி.. பாயும் நடவடிக்கை
டெல்லி: கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை பாஜக எம்பி கம்பீரின், கம்பீர் அறக்கட்டளை பதுக்கியதாக டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் சிலர் மக்களுக்கு கொரோனா மருந்துகளை வழங்கி உதவி செய்து வருகிறார்கள். சில அரசியல் தலைவர்கள், வெளியில் கிடைக்காத மருந்துகளை கூட மக்களுக்கு வழங்கி உதவி வருகிறார்கள்.
வெளியில் எளிதாக கிடைக்காத மருந்துகள் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் கிடைப்பது எப்படி, அவர்கள் முறைகேடாக ஸ்டாக் வைத்து இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

விசாரணை
இந்த விசாரணையில் டெல்லியில் மக்களுக்கு மருந்துகளை கொடுக்கும் அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் கேட்டு இருந்தது. இதையடுத்து டெல்லி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பலரிடம் விசாரணை நடத்தியது. பாஜக எம்பி முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

நீக்கம்
இந்த விசாரணையில் முதலில் கம்பீர் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமார் ஆகியோர் மருந்துகளை பதுக்கவில்லை என்று டெல்லி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை அளித்தது. ஆனால் இந்த அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறி, டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் விபின் சிங் மற்றும் ஜாஸ்மீட் சிங் அமர்வு இந்த அறிக்கையை தள்ளுபடி செய்தது. புதிய விசாரணை அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

குற்றம்
இந்த நிலையில் இன்று அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை கம்பீர் அறக்கட்டளை பதுக்கியதாக டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமார் மருந்துகளை பதுக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரும் குற்றம் செய்ததாக டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்து
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் Fabiflu மருந்துகளை முறையின்றி பதுக்கியதாகவும், அதிகமாக வாங்கி குவித்ததாகவும் புகார் வைக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கம்பீர் அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்னும் 6 வாரங்களில் ரிப்போர்ட் அளிக்க வேண்டும், இந்த வழக்கு ஜூலை 29ம் தேதி விசாரிக்கப்படும் என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications