"நான் ராஜினாமா செய்ய இதுவே காரணம்!" கடிதத்தில் ராகுலை விளாசிய குலாம் நபி ஆசாத்! 7 முக்கிய புகார்கள்
டெல்லி: காங்கிரஸில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது அடுக்கடுக்காக ஏழு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
காங்கிரஸ் உண்மையாகவே இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறது. கடந்த சில காலமாகவே அக்கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர்.
கட்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் பெரிதாக எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இது 2024 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்குப் பெரிய சிக்கலையே தரும் எனக் கூறப்படுகிறது.
தானும் படுக்காம தள்ளியும் படுக்காத காங். மேலிடம்- குலாம்நபி ஆசாத் வகையறாக்கள் குட்பைக்கு காரணம்!
குலாம் நபி ஆசாத்
கட்சியில் இருந்து விலகிய பல மூத்த தலைவர்களும் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் டெல்லி தலைமை குறிப்பாக ராகுல் காந்தி மீதான விமர்சனங்களையே கடுமையாக முன் வைத்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் இப்போது குலாம் நபி ஆசாத்தும் இணைந்துள்ளார். காங்கிரசில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது ஏழு முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கை
இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில், "ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில், நாம் கொண்டு வந்த ஒரு சட்டத்தையே அவர் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார். அந்த அவசரச் சட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும். ஆனால், ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடத்தை இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை முற்றிலும் தகர்ப்பதாக உள்ளது.
ஆலோசனையே இல்லை
துரதிர்ஷ்டவசமாக, ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக ஜனவரி, 2013இல் அவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, முன்பு இருந்த முழு ஆலோசனை முறையும் அவரால் அழிக்கப்பட்டது.
அனைத்து மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதிய அனுபவமற்ற நபர்கள் கட்சியின் விவகாரங்களைக் கையாள தொடங்கினர்.
மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தலைமை குறித்து எப்போதும் புகழ் பாடுபவர்கள் கட்சி நடவடிக்கையைக் கையாள தொடங்கினர்.
ராகுல் காந்தி
2014ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடைய ராகுல் காந்தி தான் காரணம். வலதுசாரி சக்திகள் மற்றும் சில நேர்மையற்ற பெருநிறுவனங்கள் காங்கிரஸ் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்ப அவரே காரணமாக அமைந்துவிட்டார். இதையெல்லாம் சரியாகப் பதிலடி கொடுக்க ராகுல் காந்தியால் முடியவில்லை
திடீர் விலகல்
2019 தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காக தங்கள் உயிரைக் கொடுத்த அனைத்து கட்சியின் மூத்த தலைவர்களையும் அவமதித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். அதன் பின்னர் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்ற நீங்கள் (சோனியா காந்தி) கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பதவியில் தொடர்கிறீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள்
காங்கிரஸ் தலைவராகச் சோனியா காந்தி இருக்கும் போதிலும், முக்கிய முடிவுகளை ராகுல் காந்தியே எடுப்பதாகச் சாடியுள்ளார். சில சமயங்களில் ராகுல் காந்தியின் உதவியாளர்கள் கூட கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதாகக் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். மேலும், 2014 முதல் 2022 வரை நடந்த 49 சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் 39 தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து என்ன
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தான் அவர் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார். தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் திணறி வரும் நிலையில், மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தி உள்ளது.