வெடித்து சிதறும் காங்கிரஸ்.. ரொம்ப பயமா இருக்கு.. குலாம்நபி ஆசாத் விலகலால் வருந்திய உமர் அப்துல்லா
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று விலகிய நிலையில் இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் சிதறுவதை பார்க்கவே பயமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார்.
சோனியா காந்தியுடன் நெருக்கமாக இருந்த இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை தீர்க்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார்.

அதிருப்தி தலைவரான குலாம் நபி ஆசாத்
இந்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்தார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அதிருப்தி அடைந்தார். மேலும் கட்சி தலைமை மாற்றம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் உள்பட 23 தலைவர்கள் தனியாக ஆலோசனைகள் நடத்தினர். இதுதொடர்பாக பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர். சோனியா காந்திக்கும் கடிதம் எழுதினர். அதிருப்தி தலைவர்கள் 23 பேர் கொண்ட குழுவில் குலாம் நபி ஆசாத் தான் முக்கிய நபர் ஆவார். மேலும் அவர் சமீபத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்த சில மணிநேரத்தில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் அவர் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி இன்று குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து உள்ளார்.

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். அதில் ராகுல்காந்தி மீது அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 2013 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ராகுல்காந்தியின் குழந்தைதனமான முடிவு தான் காரணம் எனவும், கட்சியில் கலந்தாலோசனை முறையை ராகுல்காந்தி ஒழித்துவிட்டதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

உமர் அப்துல்லா கருத்து
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகி இருப்பதை வருத்தம் அளிப்பதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார். தற்போது ஜேகேஎன்சி கட்சியின் துணை தலைவராக உள்ள உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை ஏற்படவில்லை. தற்போது மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிப்பது என்பது மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி சிதறுவதை பார்ப்பது வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது'' என கூறுகிறார்.












Click it and Unblock the Notifications