கொரோனா லாக்டவுனால் பாதிப்பு- ஏழைகளுக்கு ரூ7,500 உதவித் தொகை வழங்க வேண்டும்- ராகுல் காந்தி
டெல்லி: கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் ரூ7,500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

லாக் டவுன் என்பது ஸ்விட்சைப் போல் ஆன் - ஆப் செய்வது அல்ல. லாக்டவுன் தொடர்பான செயல் திட்டங்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். லாக்டவுன் தொடர்பான நடவடிக்கைகளை மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு விளக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் என்பது மிக மோசமான உயிர்க் கொல்லியாக இல்லை. சமூகத்தில் 1% பேரை மட்டுமே இது பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ் உச்சகட்டத்தை தொடுவதற்கு முன்னதாக உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாக தொடங்க வேண்டும். நாம் நமது தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்க வேண்டும்.
சிறுதொழில் நிறுவனங்களை இப்போது பாதுகாக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமடைந்துவிடும். தற்போது அவசரநிலை காலத்தில் இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் ஏழைகளுக்கு தலா ரூ7,500 வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications