டல் அடித்த சர்வதேச விமான சேவை.. இந்தியா பக்கம் ரூட்டை மாற்றும் ஏவியேஷன் நிறுவனங்கள்!
டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை, விமான சேவைகளையும் பாதித்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் விமான சேவைகளுக்கான தேவை குறைந்த நிலையில், சர்வதேச விமான நிறுவனங்கள் இந்தியாவில் விமானங்களை இயக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.
ஜூன் 1ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரை டெல்லியில், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளை சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்கள் எடுத்திருக்கின்றன. இதில் முதன்மையானதுதான் இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவது என்கிற முடிவு.

டெல்டா விமான நிறுவனம் அட்லாண்டாவிலிருந்து டெல்லிக்கு சீரான விமான சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கெனவே தேவையின் அடிப்படையில் டெல்லிக்கு விமானங்களை இயக்கிதான் வந்திருந்தது. ஆனால் இனி வாரம் முழுவதும் என விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும். அதேபோல பிரபல இந்திய விமான நிறுவனமான இண்டிகோவுடன், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் சில ஒப்பந்தங்களையும் போட்டிருக்கின்றன.
சர்வதேச விமானங்கள் இந்தியா பக்கம் திரும்புவதற்கு முன்னரே, ஏர் இந்தியாவும், இண்டிகோவும், தங்கள் வழித்தடத்தை அதிகரிக்க முடிவு செய்துவிட்டன. எனவே இதற்காக கூடுதல் விமானங்களுக்கு ஆர்டரும் கொடுத்திருக்கின்றன. ஏர் இந்தியா 2023 முதல் ஏர்பஸ் எஸ்இ மற்றும் போயிங் நிறுவனத்திற்கு 570 விமானங்களுக்கான ஆர்டர்களையும், இண்டிகோ 900க்கும் மேற்பட்ட ஏர்பஸ் விமானங்களுக்கான ஆர்டர்களையும் கொடுத்திருக்கிறது. இந்த விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் விமான சேவைகள் சூடுபிடிக்க தொடங்கும்.
சர்வதேச விமான போக்குவரத்தில், இந்திய மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், விமானங்களில் பயணிக்கவா ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள்?
இந்தியா பக்கம் இப்படி மொத்த விமான நிறுவனங்களும் திரும்பியிருப்பதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டண உயர்வு உத்தரவுதான். அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சராசரி விமான கட்டணம் 225 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது 3 டாலர்கள் அதிகமாகும்.
குறிப்பாக சில முக்கிய விமான நிலையங்களில் கட்டணங்கள் 10% வரை உயர்ந்துள்ளன. நியூயார்க் (JFK), சான் பிரான்சிஸ்கோ (SFO), மற்றும் ஓக்லாந்து (OAK) ஆகிய நகரங்களுக்கான விமான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. விலை உயர்வு காரணமாக அமெரிக்காவில் விமான சேவை அடிவாங்க தொடங்கியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலித்திருக்கிறது.
ஆனால் இந்தியா மிகவும் உற்சாகமான சந்தையாக இருப்பதாகவும், தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், விரைவில் சந்தையை வசப்படுத்துவோம் என்று விர்ஜின் அட்லாண்டிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாய் வெய்ஸ் கூறியுள்ளார்.
போட்டி அதிகரித்திருப்பதால் விரைவில் விமான கட்டணங்கள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது தற்காலிகமாகத்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் இந்திய பயணிகளுக்கு இது நல்ல விஷயம்தான்.












Click it and Unblock the Notifications