குட் நியூஸ்.. சமையல் எண்ணை மீதான சுங்க வரி முற்றிலும் நீக்கம்! குறைந்தன விலைகள்
டெல்லி: சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது, மத்திய அரசு. இதனால், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இதுபோன்ற, நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறியதாவது: சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. பல இடங்களில் 20, 18, 10 மற்றும் 7 ரூபாய் அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடை
பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா அதாவது ரேஷன் கடை மூலமான இலவச உணவு தானிய வழங்கலை நவம்பர் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது, அதனால்தான் இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சுதன்ஷு பாண்டே தெரிவித்தார்.

நிவாரண திட்டம்
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்பது 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு விரிவான நிவாரணத் திட்டமாகும். ஏழை எளியவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக அமலாக்கப்பட்ட திட்டமாகும்.

உறுதியான நடவடிக்கை
முன்னதாக, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சுதன்ஷு பாண்டே தெரிவித்தார். பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் களமிற்கியுள்ளதாகவும், வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் மாநில அரசுகள் பொருட்களின் இருப்பு வரம்பை நிர்ணயிக்கத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை
தீபாவளி பண்டிகை பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமையல் எண்ணை விலையை குறைக்கும் நடவடிக்கையாக சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications