19 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.. விமானம், கப்பலில் தாயகம் அழைத்து வருகிறது அரசு! மே 7ல் ஆரம்பம்
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கக்கூடிய இந்தியர்களை, மே 7ஆம் தேதி முதல் தாயகம் திரும்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை துவக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு சுமார் 19 லட்சம் மக்களை இந்திய அரசு திருப்பி அழைத்து வர உள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உள்நாட்டு விமான சேவை மட்டுமின்றி வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், இந்தியா திரும்ப விரும்பிய, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் அந்தந்த நாடுகளில் உள்ளனர். இவர்களை தாயகம் திரும்பி அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்து வந்தனர்.

முதல் முறை பெரிய முடிவு
இந்த நிலையில் லாக்டவுன் கெடுபிடிகள் தளர்வு அடைந்துள்ள நிலையில், அவர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இத்தனை பேரை ஒரே நேரத்தில் அழைத்துவரும் முடிவு, முதல் முறையாக இந்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்க உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் சுமார் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். பணிகள் மற்றும் தொழில் நிமித்தமாக அவர்கள் அங்கு உள்ளனர். இதன்பிறகு சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியர்களை அழைத்து வரும் பணி தொடங்க உள்ளது. 1990 வளைகுடாப் போரின் போது இந்திய அரசு குவைத் நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்களை தாயகம் திரும்பி அழைத்து வந்தது.
விமானம் மூலமாக இத்தனை அதிகமான மக்களை எந்த ஒரு நாடும் அதுவரை அழைத்துக் கொண்டது இல்லை என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.

போர்க் கப்பல்கள்
சுமார் 500 விமானங்களை இயக்கி இந்த நடவடிக்கையை, இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக எடுத்தது இந்திய அரசு. ஆனால், அதை விட அதிகமான மக்களை தற்போது இந்தியா அழைத்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வணிகரீதியான விமான சேவைகள் மற்றும் சார்ட்டர் விமானங்களை மட்டும் பயன்படுத்தாமல் இந்த முறை கடற்படையின் போர்க்கப்பல்களை, பயன்படுத்தியும் அங்குள்ள மக்களை அழைத்து வரப் போகிறது இந்தியா.

கட்டணச் சேவை
இந்தப் பணிகளைத் தொடர்ந்து, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்தியா செல்ல உள்ள மக்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கட்டணம் வாங்கிக்கொண்டு தான் இந்த சேவை செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அழைத்து வரக் கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நோய் அறிகுறி ஏதுமில்லை என்றால் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்.

பயணம்
பயணத்தின் போதும் சமூக இடைவெளி போன்ற அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும். மேலும், இந்தியா வந்ததும் அவர்கள் அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 14 நாட்கள் வீடுகளில் அல்லது வேறு இடங்களில், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அப்போது அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications