"ஆளுநர்கள் ஒன்றும் பொம்மை இல்லை! அவர்கள் மத்திய அரசின் ஏஜென்ட்.." உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
டெல்லி: ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் நேற்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக ஆளுநர்கள் ஒன்றும் பொம்மை இல்லை என்றும் ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்ட் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதித்துறைக்குக் காலக்கெடு இல்லாத போது, ஆளுநர்களுக்கு மட்டும் காலக்கெடு நிர்ணயம் செய்வது ஏன் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர்கள் மசோதா மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக ஜனாதிபதி முர்மு 14 கேள்விகளுடன் விளக்கக் குறிப்பை அளித்திருந்த நிலையில், அது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

பொம்மை இல்லை
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஆளுநரை வெறுமன பொம்மையாகக் கருத முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், நாட்டின் மாநிலங்களை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்றும் இதற்காக மத்திய அரசின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு ஏஜெண்ட் தான் ஆளுநர் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார்.
அவர் மேலும், "ஜனநாயகத்தின் வழி நடக்க வேண்டும். ஆனால் அது குழப்பமாக மாற விடக்கூடாது. மேலும், மாநில அரசுகள் தங்கள் சொந்தக் கொள்கைகளில் நிலையாக இருக்காது. அரசுகள் மாதங்கள் அல்லது வருடங்களில் மாறும்.. அவர்களுடன் அவர்களின் கொள்கைகளும் மாறும். ஆளுநர்களும் மாறலாம், ஆனால் மத்திய அரசால் ஆளுநர்களுக்கு வழங்கப்படும் கொள்கை மற்றும் அறிவுறுத்தல்கள் மாறாமல் இருக்கும்.
தலையிடக்கூடாது
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டால், மத்திய அரசின் கட்டுப்பாடு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளுநர் ஒருபுறம் மத்தியக் கொள்கையின் பாதுகாவலராகவும், மறுபுறம் அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும். எனவே, அவரது அதிகாரங்களில் தலையிடக்கூடாது" என்றார்.
மேலும், ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாவட்ட அதிகாரிகள் போன்ற அதிகாரிகளுக்குக் காலக்கெடு விதிக்க முடியும் என்றும்.. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் போன்ற அரசியலமைப்பு அதிகாரிகளுக்குக் காலக்கெடு எதுவும் இல்லை இல்லை என்று துஷார் மேத்தா தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு அரசியலமைப்பு துறைகளுக்கும் முக்கிய செயல்பாடுகள் உள்ளன என்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாதா?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநர்களின் முடிவுகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன என்றனர். மேலும், ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மாநிலம் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாதா என்று கேள்வி எழுப்பினர். இது ஒரு முக்கியமான சட்டக் கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேத்தா, காலக்கெடுவை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் விதிக்க முடியாது என்ற கருத்தை மட்டுமே தான் முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்
நீதிமன்ற உத்தரவுகள் மூலம் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கு மூன்று மாதக் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "ஒரு தவறு நடந்தால் அதற்கு நிச்சயம் தீர்வு இருக்க வேண்டும்" என்று குறுக்கிட்டார். இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி நீதிமன்றம் மட்டுமே அல்ல என்று சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, "இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலன்" என்றார்.
நீதிமன்றத்திற்குக் காலக்கெடு இல்லை
இதையடுத்து தனது வாதத்தைத் தொடர்ந்த துஷார் மேத்தா, நீதிமன்றங்கள் ஒரு வழக்கு குறித்து முடிவெடுக்க எந்தவொரு காலக்கெடுவும் இல்லாத போது ஆளுநர்களுக்கு மட்டும் காலக்கெடு விதிக்கப்படுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு எதிராக இப்போது ஒன்றும் அதிக வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படிக் காரசாரமாக நேற்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நேற்றுடன் மத்திய அரசின் வாதங்கள் நிறைவடைந்தன. அடுத்தகட்டமாக மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளன. அவை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கும்.












Click it and Unblock the Notifications