ஆளுநர் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் புகாரை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய ஜனாதிபதி.. பரபர தகவல்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி முர்முவை திமுக பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய புகார் மனுவை சீலிட்ட கவரில் வைத்து வழங்கினர். இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் குறிப்புடன் அந்த புகார் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி டெல்லி சென்றுள்ள நிலையில் இந்த கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து, சித்தாந்தம் சார்ந்த மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் ரவி டெல்லி போவது இதற்காகத்தானா? ஜனாதிபதியிடம் பேசியதை பகிரங்கமாக சொல்ல முடியாது : டி.ஆர்.பாலு
இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றி சட்டசபை கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். இந்த வேளையில் அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை அவர் வாசிக்கவில்லை. அதோடு சில புதிய கருத்துகளை அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து பாதியில் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையின் மரபை மீறிவிட்டார். சட்டசபையில் மாண்புடன் நடந்து கொள்ளவில்லை என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக திமுக சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி சட்டசபையில் ஆளுநர் ஆர்என் ரவி நடந்து கொண்டது தமிழ்நாட்டின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது. அவர் அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். மாநில மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட அறிவுரை வழங்க வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுவின் தலைவரான டிஆர் பாலு தலைமையிலான தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வழங்கியது. மேலும் ஆளுநரின் செயல்பாடு குறித்து டிஆர்பாலு தலைமையிலான குழுவினர் வாய்மொழியாக ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் கூறினர்.
இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கப்பட்ட கடிதம் அடுத்த கட்ட செயல்பாட்டை துவங்கியது உள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது குறிப்புடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அனுப்பி உள்ளார். இதில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் குறிப்பின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இந்த விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்லியில் ஆளுநர் ஆர்என் ரவி
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்றும் அவர் டெல்லியில் தான் இருக்கிறார். இவர் ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அவர் மீதான புகார் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் இந்த மேட்டர் அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளது.