ஆளுநர்களுக்கு மசோதாக்களை நிறுத்த அதிகாரம் இல்லை- 2-வதாக அனுப்பினால் ஒப்புதல் தரனும்: உச்சநீதிமன்றம்!
டெல்லி: மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது; சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த 10-ந் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து, மசோதாக்களை நிறுத்தி வைக்க கூடாது; அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்க உத்தரவிட்டது. ஆனால் ஆளுநரோ 10 மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கு திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் எழுப்பியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்த கருத்துகள்:
- ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது.
- சட்டசபை மசோதா தவறு என கருதினால் திருப்பி அனுப்பும் போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற குறிப்பு இடம் பெற வேண்டும்
- சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் நிதி மசோதாக்களை போல கருதி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்
- மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஏன் ஒப்புதல் தராமல் இருக்க வேண்டும்?
- உச்சநீதிமன்றம் நவம்பர் 10-ந் தேதி உத்தரவிடுகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தார். 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?
- தனிப்பட்ட ஒரு ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பது மட்டும் பிரச்சனை அல்லை. பொதுவாக மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைப்பது தொடர்பாக அடுத்த விசாரணையில் எடுத்து கொள்ளப்படும்.
- மசோதாக்கள் மீது ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்புகிறீர்களா? அல்லது ஜனாதிபதியின் முடிவுக்கு ஆளுநர் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கிறதா?
- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் தரலாம்; ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பலாம்; ஜனாதிபதி முடிவுக்காக காத்திருக்கலாம்.
-தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications