கொரோனாவால் பொருளாதாரத்திற்கு அடி.. நிர்மலா தலைமையில் சிறப்புக் குழு.. மோடி அறிவிப்பு
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரத்தின் மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து அதை சரி செய்வதற்கு பொருளாதார பணிக்குழு அமைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மோடி இன்று இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், இது ஒரு சுய ஊரடங்கு உத்தரவு என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதியவர்கள் இந்த நோய் பிரச்சினை தீரும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போரை விடவும் கொரோனா வைரஸ் பிரச்சினை அதிகப்படியான நபர்களை பாதித்துள்ளது என்று தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதை பாருங்கள்: பதட்டம் காரணமாக மொத்தமாக பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். இயல்பாக வழக்கம்போல பொருட்களை வாங்குங்கள். இங்கு பீதி அடைவதற்கான எந்த அவசியமும் கிடையாது.
பால், மருந்து, உணவு பொருட்கள் போன்றவற்றின் சப்ளை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பீதி அடையவோ, அச்சப்படவோத் தேவையே கிடையாது. எந்த ஒரு பொருளையும் வீட்டில் அதிகப்படியாக சேமித்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
கொரோனா வைரஸ் பிரச்சினை நாட்டின் பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிப்பதற்காக, நிதியமைச்சர் தலைமையில், பொருளாதார பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது அனைத்து துறையுடனும் தொடர்பு கொண்டு நிலைமையை சரி செய்யும்.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மீது மனிதாபிமானத்தை காட்ட வேண்டிய நேரமிது. உங்களது ஊழியர்களுக்கு, பணி இழப்பு செய்யாதீர்கள். அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யாதீர்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications