அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலும் அகற்றம்.. குடியரசு தலைவர் உரையில் புகழாரம்
அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.
டெல்லி: அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேசினார். ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மகக்ள் தடையற்ற உணவை பெறுகின்றனர். என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.
ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். அதன்படி, நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்கியது.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு முதல்முறையாக கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

முத்தலாக் முறை ஒழிப்பு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் முத்தலாக் முறை ஒழிப்பு போன்ற தீர்க்கமான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது. பிரச்சினைகளுக்கு பிறரை சார்ந்திருந்த இந்தியா இன்று பிற நாடுகளுடைய பிரச்சினைகளை தீர்க்கும் நாடாக மாறியிருக்கிறது. 2047-க்குள் கடந்த கால பெருமைகளை உள்ளடக்கிய நவீனமயமாக்கத்தின் அனைத்து அத்தியாயங்களையும் உள்ளடக்கிய ஒரு தேசத்தை கட்டமைக்க வேண்டும்.

ஊழலை ஒழிப்பதற்காக
இன்று ஒவ்வொரு இந்தியரின் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையும் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏழைகளுக்காகவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. நிலையான அச்சமற்ற தீர்க்கமான பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இளைஞர்களின் சக்தி
கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றனர். முறைகேடு என்பது அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டுகிறது. வறுமை இல்லாத நாடாகவும் நடுத்தர மக்களும் செழுமையுடன் இருக்கும் நாடாகவும் இந்தியா இருக்க வேண்டும். சமூகத்திற்கும் தேசத்திற்கும் வழிகாட்டுவதில் இளைஞர்களின் சக்தியும் பெண்களின் சக்தியும் முன்னணியில் இருக்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்.

சுமார் 11 கோடி குடும்பங்கள் பலன்
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. ஏழை மக்களுக்கு எரிவாயு , மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை அளிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவக் கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. உதான் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் விமான பயணம் என்பது சாத்தியமாகியுள்ளது.

காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி
ஜி.எஸ்.டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. விமர்சியாக நடைபெற்ற காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை வெளிப்படுத்தியது. அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications