ஜிஎஸ்டி சரியில்லை.. இப்போ இன்னும் மோசம்.. காங்கிரஸ் வந்தால் மாற்றியமைப்போம் - ப.சிதம்பரம் பேச்சு!
டெல்லி : தற்போதைய ஜி.எஸ்.டி முறை குறைபாடுகளை கொண்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள் மிகவும் மோசமாகிவிட்டது என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு, இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சுதந்திரம், குடியரசு நாளை விட ஜிஎஸ்டி நாள் தான் முக்கியமானது... தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பரபர பேச்சு
இந்நிலையில், ஜிஎஸ்டி குறித்து பேசிய ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டியை நிராகரிப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி நாள்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி எனச் சொல்லப்படும் ஜிஎஸ்டி வரி விதிம்மு முறை பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதையொட்டி இன்றைய தினம் ஜி.எஸ்.டி நாளாக பாஜக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் அரசு
கடந்த 2011ஆம் ஆண்டு, மார்ச் 22ம் தேதி, ஜிஎஸ்டி குறித்த 115வது சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்தது. அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு பரிசீலணைக்கு அனுப்ப வேண்டும் என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக வலியுறுத்தியது. நாடாளுமன்ற நிலைக்குழு 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி மசோதா மீதான அறிக்கையை அளித்தது. இந்தக் குழுவின் அறிக்கைக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி அமல்
2014ம் ஆண்டு மத்தியில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஜிஎஸ்டி மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார். அதன்பின் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது.
மாநிலங்கள் பாதிப்பு
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால், மாநிலங்களின் வரி நிர்வாகம் மேம்படும், வரி வருவாய் உயரும் என்று கூறப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த இழப்பீட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2022, ஜூன் மாதம் வரை தருவோம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மாநிலங்களின் வரி வருவாய் இன்னும் மேம்படாததால் இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறைபாடுகள் கொண்ட ஜிஎஸ்டி
இந்நிலையில், ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய ஜி.எஸ்.டி முறை பிறப்பு குறைபாடுகளை கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள் மிகவும் மோசமாகி விட்டன. பாஜக அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0
மேலும் பேசிய அவர், "இன்று அமலில் உள்ள ஜி.எஸ்.டி முறை, முந்தைய காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி அல்ல. தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை இது முற்றிலும் சிதைத்து விட்டது. காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டி.யை நிராகரிக்கிறது. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய ஜிஎஸ்டியை குறைந்த விகிதத்தில் இருக்கும்படியான ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.