உத்தரகாண்ட்டை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் குஜராத் பாஜக அரசு- குழு அறிவிப்பு!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஆளும் பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்கான 5 பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் இன்று அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி மதங்களின் அடிப்படையில் பல்வேறு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரானது பொது சிவில் சட்டம். அனைத்து மதத்தினருக்கும் திருமணம், வாரிசுரிமை, விவாகரத்துக்கு ஒரே சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும் என்கிறது வலதுசாரிகளின் இந்த பொது சிவில் சட்ட முழக்கம். இதனை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று.

இந்த பின்னணியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதாக அறிவித்தது. கடந்த மாதம் 27-ந் தேதி முதல் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பான இணையதளமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற இடத்தைப் பிடித்தது உத்தரகாண்ட் அரசு.
உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளன.
பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் மாநில அரசும் தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்காக 5 பேர் கொண்ட குழுவை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் இன்று அறிவித்தார். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தமது அறிக்கையை அடுத்த 45 நாட்களில் மாநில அரசிடம் சமர்ப்பிக்கும்; இதனடிப்படையில் மாநில அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் பூபேந்திர பட்டேல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications