குஜராத் கலவரத்தில் 22 முறை பலாத்காரத்திற்கு உள்ளானவர்.. பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
டெல்லி: குஜராத்தில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, வாழ்க்கையை இழந்த பில்கிஸ் பானுக்கு ரூ.50 லட்சம் உதவித் தொகை வழங்க குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 2002ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற இளம் பெண், அவரது 3 வயது மகள் உள்பட 18 பேர் தப்பிச் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது.
அப்போது பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரையும், அவரது உறவுக்கார பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த கலவர கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் மற்றும் பெண் உள்பட பிறரை படுகொலை செய்தது. 22 முறை பலாத்காரத்திற்கு உள்ளாகி, தாக்குதலில் படுகாயமடைந்த, பில்கிஸ் பானு, அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காவல்துறை உதவிகள் செய்யாத நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதரவுக்கரம் பில்கிஸ் பானுக்கு கிடைத்தது. இந்த வழக்கு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரா? நாளை விளக்கம் அளிக்க வழக்கறிஞருக்கு உத்தரவு!
இந்த நிலையில், குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானுவிற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க முன் வந்தது. இதை பில்கிஸ் பானு ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை நடத்தி இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாவது:
குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தபோதிலும், பாதிக்கப்பட்டுள்ள பெண்ணான, பில்கிஸ் பானு தனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார். தற்போது பில்கிஸ் பானுவிற்கு 40 வயதாகிறது. அவருக்கு போதிய கல்வித் தகுதி இல்லை. குடும்பத்தையும் இழந்துள்ளார். எனவே, அவரது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய குஜராத் அரசு ரூ.50 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.